Breaking News

திலீபனை கொலையாளி என கூறிய டக்ளஸ் தேவானந்தா!

திலீபன் ஒரு கொலையாளி எனவும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும்; இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில்; கலந்துகொண்ட கொண்ட போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைக் கூறினார்.

திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க கோரி வடக்கு கிழக்கில் நேற்று நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், தமிழ் தேசிய கட்சிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்தன.

இது குறித்து ஊடகவியலாளர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பியபோது உடனடியாக குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலீபன் ஒரு கொலையாளி என்றும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை என்றும் கூறினார்.

தனது தம்பியை அவரே கடத்தியதாக கூறிய டக்ளஸ் தேவானந்தா அரசியல் தேவைக்காகவே அவருக்கு நினைவஞ்சலி நடத்த முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் பிரதமரோ அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அமைச்சர்களான விமல்வீரவன்ச, கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்டவர்கள் எந்த பதிலையும் கூறியிருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.