Breaking News

வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரிடம் இருந்து ஓர் விசேட செய்தி!

வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் ஆரம்பமாகின்ற வாரமும் அபராதம் விதித்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பன எடுக்கப்பட மாட்டாது என காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

காவல்துறை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் சட்ட நடவடிக்கையாக சட்டங்களை மீறும் சாரதிகளை அழைத்து விளக்கமளிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

2 ஒழுங்கைகள் கொண்ட வீதியில் பேருந்து, முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி என்பன இடது பக்க ஒழுங்கையில் பயணிக்க வேண்டும். 

ஏனைய வாகனங்கள் இரண்டாவது ஒழுங்கையில் பயணிக்க வேண்டும். 

பயணிகளை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு பேருந்து நிலையங்களில் வேறாக இடம் காணப்படுமாயின்; பேருந்துகள் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும். 

வேறாக இடங்கள் ஒதுக்கப்படாத பேருந்து நிலையங்களில் வீதிகளுக்கு தடை ஏற்படாதவாறு பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும். 

சுற்றுவட்டங்கள், சந்திகள் அல்லது மாற்று வீதிக்கு செல்லும் போது மாத்திரமே மற்றைய ஒழுங்கைகளில் வாகனங்ளை செலுத்த முடியும். 

3 ஒழுங்கைகள் காணப்படும் வீதிகளில் இடது பக்க முதலாவது ஒழுங்கையில் பேருந்து, முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி என்பன மாத்திரமே பயணிக்க முடியும். 

இரண்டாவது ஒழுங்கையில் பேருந்து தவிர்ந்த ஏனைய வாகனங்கள் பயணிக்க முடியும் எனவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் பிரதான 4 வீதிகளை மையமாக கொண்டு காலை 6 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் வீதி ஒழுங்கை சட்டம் கடந்த 14 ஆம் திகதி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கமை ஹைய்லெவல் வீதியில் நுகேகொடை - அநுலா வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து பித்தலை சந்தி வரையும் பேஸ்லையின் வீதியில் களனி பாலம் முதல் ஹைய்லெவல் பேஸ்லையின் சந்தி வரையும், காலி வீதியில் வெள்ளவத்தை முதல் லிபட்டி சுற்றுவட்டம் வரையிலும் வீதி ஒழுங்கை சட்டம் அமுலில் உள்ளது. 

இதேவேளை, பேருந்து முன்னுரிமை ஒழுங்கை இரத்து செய்யப்படுமாயின் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 

தற்போது மகிழூந்தில் பயணிப்பவர்களுக்கே காவல்துறையினரால் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 

உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றை பேருந்து ஒழுங்கையில் செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும். 

பேருந்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் வீதி திட்டத்தை மீறுகின்ற பட்சத்தில் கொழு;பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொது போக்குவரத்து பாரியளவில் பாதிக்கப்படுமெனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.