Breaking News

இன்றும் மழையின் சாத்தியம் - மக்களுக்கு எச்சரிக்கை!

 


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில்,  தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, குருநாகல், களுத்துறை,  மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.