Breaking News

13 ஐ தாண்டியும் அதிகாரத்தை பெற்றுதர இந்தியா நடவடிக்கை எடுக்கும்! பிரதமர் மோடி உறுதி!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

13ஆவது அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க இந்திய அரசு உதவும். இலங்கை ஜனாதிபதியை முதன்முறையாகச் சந்தித்தபோதே இதுகுறித்த நான் பேசியிருந்தேன். விரைவில் வடக்கு மாகாண முதலமைச்சரையும் அழைத்து நான் பேசுவேன். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இந்திய பிரதமரிடம் நாம் இலங்கைப் பிரச்சினை குறித்த பல்வேறு விடயங்களை விரிவாகப் பேசினோம். இந்தச் சந்திப்பு எமக்கு திருப்திகரமாக அமைந்தது. எங்கள் கருத்துக்களை கேட்டறிந்த அவர், "எனது பிரதமர் பதவியேற்பு நிகழ்வுக்கு வந்திருந்த இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நான் தெளிவாக விளக்கியிருந்தேன். அவரும் அதை நன்றாக உணர்ந்திருக்கிறார்" என்று மோடி எங்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் காத்திரமான நடவடிக்கையை எடுக்க இந்தியா அக்கறையுடன் செயற்படும். 13ஆவது அரசியல் திருத்தத்தில் சொல்லப்பட்ட அதிகாரங்களிலும் கூடுதல் அதிகாரங்களை இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று இந்திய அரசு இலங்கையிடம் வலியுறுத்தும்.

இதற்காக இலங்கை அரசுடன் நாம் பேசுவோம் என்றும் அவர் எம்மிடம் உறுதியளித்தார். தமிழ் தலைவர்களும் இந்தியாவுடன் தொடர்புகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கோரினார். அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திக்க தான் விரும்புகிறார் என்றும் அவரை வரவேற்று சந்திப்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும் மோடி எம்மிடம் தெரிவித்தார்.

'ஜெயலலிதாவை சந்திக்க காத்திருக்கிறோம்'

இலங்கைத் தமிழ் மக்களின் நலனுக்காக இந்தியப் பிரதமரை சந்திக்கும் நீங்கள், தமிழகத்தின் அரசியல் தலைவர்களின் தலையீட்டை வேண்டாம் என்று மறுப்பது ஏன் என்று சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சம்பந்தன், நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்களிப்பைமுழுமையாக வரவேற்போம் என்றார்.
ஆனால், இதற்குத் தேவையான செயற்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் ஒருமனதோடும் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாக அவர் பதிலளித்தார்.
இந்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக் கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிய போதே, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் தற்போது வரை சந்திப்பு தொடர்பான பதிலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசுடன் தாங்கள் தொடர்பில் இல்லை என்று கூறுவது தவறு என்றும் அவர் அப்போது விளக்கம் அளித்தார்.