Breaking News

வடமாகாணசபைக்கு சகல அதிகாரங்களும் உண்டு- மகிந்த

வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழகத்தில்ல் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது  தெரிவித்துள்ளார். 

இந்தச் செவ்வியில் அவர், “தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு உள்ளது. துரதிஸ்டவசமாக அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்கள் அதனைச் செய்ய விரும்பவில்லை.மக்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு அவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் என் மீதும், ஆளுனர் மீதும் பழியைப் போடுகிறார்கள்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அதனைச் செய்ய முடியும். அவர்களுக்கு நாம் பணத்தை அனுப்புகிறோம். முடிவு செய்ய வேண்டியது அவர்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழர்களுக்கு எதிரானவர் என்று தனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள, மகிந்த ராஜபக்ச,

தமிழர்களுக்கு எதிரானவனாக நான் எப்படி இருக்க முடியும்? இதுபற்றி எனது அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்பதே நல்லது.தமிழர்களுக்கு எதிராக என்னால் செயற்பட முடியாது.

எனது மருமகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரை திருமணம் செய்துள்ளார். இன்னொரு மருமகள் கண்டியை சேர்ந்த முஸ்லிமை மணம் செய்துள்ளார்.நாங்கள் உறவுகளைக் கொண்டிருக்கிறோம். தமிழ், முஸ்லிம், சிங்களவர்களிடையே திருமண உறவுகள் நிகழ்கின்றன.

நான் எப்போதுமே, அனைவரையும் சமமாகவே நடத்துகிறேன்.நான் இந்த நாட்டின் அதிபர். என்னால், சமயம் சார்ந்தோ, இனம் சார்ந்தோ ஒருபக்க நிலைப்பாட்டை எடுக்க முடியாது.எமது வாக்குகளை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் எம் மீது சேற்றை வாரி வீசுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.