வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் இரகசிய திட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுமக்களின் வாக்குகளை கொள்ளையடித்து வெற்றியைத் தட்டிப் பறிக்க ஜனாதிபதி தரப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்கான திட்டங்களை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தலைமையில் தனியானதொரு குழுவினரைக் கொண்டு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் தேர்தல் தொகுதியொன்றுக்கு சுமார் நான்காயிரம் தொடக்கம் ஐயாயிரம் வரையான மைத்திரியின் ஆதரவாளர்களை வாக்களிக்க விடாமல்தடுத்து மைத்திரியின் வெற்றியைத் தடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதன் மூலம் மைத்திரி தரப்புக்கு கிடைக்க வேண்டிய சுமார் பத்து லட்சம் வாக்குகளை தடுத்து வெற்றியைத் தட்டிப் பறிப்பது அரசாங்கத்தின் ரகசிய திட்டமாகும்.குறித்த ரகசிய திட்டத்தை இலகுவாக்கும் வகையில் தற்போது தேர்தல் தொகுதி தோறும் மைத்திரியின் தீவிர ஆதரவாளர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணிப் பக்கம் தாவியுள்ள நிலையில், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் வன்முறைகளைத் தூண்டி வாக்களிப்பதைத் தடுப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான தகவல்கள் எதிர்க்கட்சிகளுக்கும் கிடைத்துள்ள நிலையில், அரசாங்கத்தின் வன்முறைகளை எதிர்கொள்வதற்கும், சதித்திட்டங்களை முறியடிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.