Breaking News

சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி - வைகோ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பொலிவூட் நடிகர் சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சல்மான் கான் இலங்கைக்கு வந்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் வைகோ கூறுகையில்,

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து உலகத் தமிழர்களை சல்மான்கான் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி.இலங்கையைச் சேர்ந்தவரும், பொலிவூட் நடிகையுமான ஜெக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து ராஜபக்ஷவுக்காக வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

அவரது இந்த செயல் தமிழகத்திலும் அதிர்ச்சி அலைகளைப் ஏற்படுத்தியுள்ளது என்றார். இதேவேளை, சல்மான் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தமைக்கு தி.மு.க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.