கிரேக்கக்கடலில் தீப்பிடித்த கப்பலில் மீட்புப்பணிகள் தீவிரம்
கிரேக்கக்கடற்பரப்பில் இருக்கும் கர்பூ தீவுக்கு மேற்கே தீப்பிடித்த கப்பலிலிருந்து 460 பேரை மீட்கும் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையை கிரேக்க கடற்படை முன்னெடுத்துவருகிறது.
இதுவரை அந்த கப்பலில் இருந்து 150 பயணிகள் உயிர்காப்பு படகுகளுக்கு மாற்றப்பட்டிருப்பதாக வர்த்தக கிரேக்கத்தின் கப்பல்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அந்த கடற்பரப்பில் வீசும் காற்று காரணமாக முப்பதுக்கும் அதிகமானவர்கள் மட்டுமே இதுவரை மீட்புக்கப்பலுக்குள் மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்த தீவிபத்துக்குள்ளான நார்மன் அட்லாண்டிக் கப்பலைச்சுற்றி ஏராளமான கப்பல்கள் சூழ்ந்து கொண்டு அங்கு வீசும் சூறைக்காற்றின் தாக்கம் தீவிபத்துக்குள்ளான கப்பலை அதிகம் தாக்காமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கிரேக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.