Breaking News

தபால் மூல வாக்கெடுப்பின் போது அதிக தேர்தல் மீறல்கள்-கபே

தபால் மூல வாக்கெடுப்பின் போது கடுமையான தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்றதாக கபே முறைப்பாடு செய்துள்ளது.தபால் மூல வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றதுடன், இன்றும் தபால் மூலம் வாக்களிப்புச் செய்ய முடியும்.


தபால் மூல வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்று, அரச தனியார் ஊடகங்களில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது என கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை கடுமையான தேர்தல் விதி மீறலாகும்.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் அல்லது வேறும் ஓர் நாளில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளரிடம் கோரப்பட்டது.

ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிப்பில் பங்கேற்கும் நேரத்தில் இவ்வாறு நேரடி ஒளிபரப்புச் செய்வது கடுமையான தேர்தல் விதி மீறலாகும்.
தபால் மூல வாக்கெடுப்பு நடைபெறும் தினத்தில் அரச தனியார் ஊடங்களில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிய விபரங்கள் நேரடியாக ஒளிபரப்புச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

மொனராகல,  பதுளை, அம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தபால் மூல வாக்கெடுப்பு நடைபெறும் நிலையங்கள் மற்றும் அதற்கு வெளியே கடுமையான தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் 459 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

2005 மற்றும் 2010ம் ஆண்டுகளை விடவும் இம்முறை தேர்தலில் அதிகளவு வன்முறைகளும் விதிமீறல்களும் இடம்பெற்று வருவதாக ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.