மகிந்த மீதான விசாரணைக்கு ஆதரவு - சீசெல்ஸ் அரசு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொத்து விபரங்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீசெல்ஸ் அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சீசெல்ஸ் நாட்டில் கொண்டிருக்கும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என திட்டமிடல் மற்றும் பொருளாதாரத்துறை பிரதியமைச்சர் ஹர்சா டி சில்வா இதனை அறிவித்தார். இவ்விடயத்தில் விசாரணைகளை மேற்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளதாகவும் இதற்காக தனிப்பட்ட கணக்காய்வாளர்களின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைக்காக உலக வங்கியின் திருடப்பட்ட சொத்துக்கள் மீட்பு திட்டத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சீசெல்ஸ் நாடு, திருடப்பட்ட சொத்துக்களின் பாதுகாப்பான சுவர்க்கமாக கருதப்படுகிறது என்றும் ஹர்ச கூறினார். சீசெல்ஸின் முகவரிகளை கொண்டு சுவிஸ் நாட்டின் வங்கிகளில் பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியில் இருக்கும்போதே தாம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததாக ஹர்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
90,000 பேரை மாத்திரமே கொண்ட சீசெல்ஸில் இருந்து கடந்த வருடத்தில் மாத்திரம் சுவிஸ் வங்கிகள் மேற்கொள்ளப்பட்ட வைப்புக்கள் அதிகரித்ததாக அவர் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி இலங்கையில் சொத்துக்களை திருடி சீசெல்ஸ் நாட்டில் பதுக்கி வைத்திருப்பது தொடர்பில் ஊடகங்களில் செய்தி வந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக புதிய ஜனாதிபதி தலைமையிலாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சீசெல்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.








