நான் இலங்கையில் தான் இருக்கிறேன் - கே.பி
"இலங்கையில் இருந்து நான் வெளியேறும் திட்டம் இல்லை´ என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவரான "கே.பி´ என அழைக்கப்படும் குமரன் பத்மநாபன் தெரிவித்துள்ளாா்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வெளிநாட்டுக்கு அவர் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், "நான் இலங்கையில்தான் இருக்கிறேன்´ என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சியில் உள்ள தனது ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்´ செய்தியாளருக்கு தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஆற்றி வரும் மனிதநேயப் பணிகள் தொடர்வதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அனுமதித்தால், இறைவனுக்கு நன்றி சொல்வேன். புதிய அரசின் நடவடிக்கைகள் எனக்கு எதிராக இருக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, எனக்கு வழங்கப்படும் ராணுவப் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று குமரன் பத்மநாபன் கூறினார். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்காக, 2 ஆதரவற்றோர் இல்லங்களை கிளிநொச்சியில் குமரன் பத்மநாபன் நடத்தி வருகிறார்.








