மின்நிலையத்தை மூடுமாறு கோரி மருத்துவர்கள் உண்ணாவிரதம்
எண்ணெக் கசிவிற்குக் காரணமான மின்நிலையத்தை உடனடியாக மூடிவிடுமாறு கோரி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் நொதேன் பவர் என்னும் தனியார் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் கழிவு எண்ணெய் சுன்னாகம் பகுதியையும் தாண்டி வேறு பகுதிகளுக்கும் பரவிவருகின்றது.இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்தக் கோரியே மருத்துவர்கள் சிலர் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பருத்தித்துறைப் பிரதேசத்துக்கு எண்ணெய் வருவதைத் தடுக்கும் முகமாக பருத்தித்துறை வைத்திய அதிகாரி டாக்டர் செந்தூரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அளவெட்டி, மாவட்ட வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கமலநாதன், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அண்மையில் குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டினால் அந்தப் பிரதேசத்திலுள்ள குடிநீர் கிணறுகளில் எண்ணெய்க் கழிவுகள் கலந்துள்ளதாக சுட்டிக்காட்டி அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.









