Breaking News

காணி அபகரிப்பு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் - த.தே.ம.மு அழைப்பு

கூழாவடி பிரதேசத்தில் உள்ள காணிகளை இராணுவ முகாம் அமைக்க வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில்,

கூழாவடி ஆனைக்கோட்டை என்னுமிடத்தில் பொது மக்கள் பலருக்குச் சொந்தமான காணிகள் வீடுகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அக்காணிகள் அரசினால் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்கப்படவுள்ளது.

ஜே-133 இல கிராமசேவகர் பிரிவில் சுவீகரிக்கப்பட்ட மேற்படி காணிகள் வீடுகளை இராணுவத்தின் 11வது சிங்க றெஜிமென்ற் ‘பி’ அணிக்கான நிரந்தர நிலையத்தை ஸ்தாபிப்பதற்காக வழங்கப்படவுள்ளது.மேற்படி இராணுவ முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினரிடம் காணி கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி காலை நடைபெறவுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலரினால் குறித்த காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்கள் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதனை விரும்பாதபோதும் அவர்களது விருப்பத்திற்குமாறாகவே மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்கும் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 8 மணிக்கு கூழாவடி ஆணைக்கோட்டையில் நடைபெறவுள்ளது.என குறிப்பிடப்பட்டுள்ளது.