காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று திருகோணமலையில்
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் திருகோணமலை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
நான்கு நாட்கள் நடக்கவுள்ள இந்த அமர்வுகளில், சாட்சியமளிக்க விண்ணப்பிக்காதவர்களும் வந்து சாட்சியமளிக்க முடியுமென ஆணைக்குழுவின் உயரதிகாரியொருவர் தீபம் இணையத்தளத்திற்கு தகவல் தந்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திலிருந்து 205 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும், மேலதிகமாக பாதிக்கப்பட்ட உறவினர்கள் தமது சாட்சியங்களை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ள ஆணைக்குழுவின் போது நேரடியாக வந்து சாட்சியமளிக்க முடியுமென அவ்வதிகாரி தெரிவித்தார்.
குச்சவெளி பிரதேச செயலகத்தில் இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர். இப்பிரதேசத்திலிருந்து 112 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் இவர்கள் தென்னமரவடி, திரியாய், புல்மோட்டை, சல்லி, நிலாவெளி, குச்சவெளி, பெரியகுளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் 3ஆம் திகதிகளில் திருகோணமலையிலுள்ள குச்சவெளி தவிர்ந்த 10 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சாட்சியமளிப்பார்கள். இப்பிரதேசங்களிலிருந்து 93 பேரே விண்ணப்பித்துள்ளனர் எனவும் இதேவேளை தமது உறவுகள் காணாமல் போனது சம்பந்தமாக சாட்சியம் அளிக்க விரும்புகின்றவர்கள் நேரடியாக வந்து சாட்சியமளிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினர் காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணை களை தொடர்ந்து 4 நாட்கள் நடத்தவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.