எனது தோல்விக்கு காரணம் இந்தியா! மஹிந்த குற்றச்சாட்டு
இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்விக்கு இந்தியாவின் உளவுத்துறை சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்துள்ள நிலையிலேயே ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் சதி செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டேன் அதற்கு இந்திய உளவுத்துறையின் தலைவர் பின்னணியில் இருந்தாரெனவும் தேர்தல் நடைபெறும் நாளில் கடைசி நிமிடம் வரை எனது தோல்விக்காக அவர் பாடுபட்டார் எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தான் குற்றம் சுமத்தவில்லையென்றும் அவர் ஒரு ஆண்டுக்கு முன்பு தான் பிரதமராக பதவி ஏற்ராரென்றும் ஆனால் தன்னை தோற்கடிக்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மறைமுகமாக சதி வேலைகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் தான் ஜனாதிபதியாக இருந்த சந்தர்பத்தில் பிரதமர் மோடியை 3 தடவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் கடைசியாக 5 இந்திய மீனவர்களின் தூக்கு தண்டனையை இரத்து செய்யப்பட்ட பின்பு சார்க் மாநாட்டில் சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.
தற்போது அவர் இலங்கைக்கு வருகைதந்துள்ளார், எனவே அவரை நாளை தான் நிச்சயம் சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்








