ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் - தமிழிசை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருப்பது தமிழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது என, தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ. கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
பிரதமர் மோடி இலங்கை சென்றிருப்பது இலங்கைத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்குள்ள தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தோடு கூடிய நல்வாழ்வு பெறவும், மீள் குடியேற்றம் பெறுவதற்கும், அவர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகளில் குடியேறவும் இந்தப் பயணம் மிகவும் முக்கியமானது.
சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கையை மீட்டெடுத்து சமூக, பொருளாதார ரீதியில் அந்த நாட்டுடன் இணைந்து செயல்படவும், தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தவும் இந்தப் பயணம் உதவும்.
தமிழக பாஜகவைப் பொருத்தவரை, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை நம்புகிறோம் என்றார்.








