ஏப்ரல் 14 : இலங்கையர்களுக்கு மோடி கொடுத்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படுமா?
இலங்கையில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14ம் நாள் தொடக்கம், வருகை நுழைவிசைவு வழங்கப்படும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை பயணத்தின் போது, ஏப்ரல் 14ம் நாள் தொடக்கம், இலங்கையில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை நுழைவிசைவு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், ஏப்ரல் 14ஆம் நாளுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இதுபற்றிய எந்த அறிவிப்பும் இன்னமும் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக முதன்மைச் செயலர் கௌரவ் அலுவாலியாவிடம் கேள்வி எழுப்பிய போது, தமக்கு இது தொடர்பான எந்தப் பதிலும் வரவிலலை என்று தெரிவித்துள்ளார். இது இந்தியப் பிரதமரால் அறிவிக்கப்பட்டது என்பதால்,இணையத்தள நுழைவிசைவு வசதிகள் ஆரம்பிக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும், ஏப்ரல் 14ம் நாளுக்குப் பின்னர், இந்த வசதிகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இணையத்தள நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்தியத் தூதரகத்தின் மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தியாவில் வருகை நுழைவிசைவு பெறுவதற்குத் தகுதியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை. அதேவேளை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தியாவில் வருகை நுழைவிசைவு வழங்கப்படுவது தொடர்பாக தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.








