Breaking News

20 வருடமாக நேதாஜி குடும்பத்தினரை உளவு பார்த்த நேரு! பரபரப்பு தகவல்கள் (காணொளி இணைப்பு)

முன்னாள் இந்திய பிரதமர் நேருவின் அரசாங்கம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சுமார் 20 வருடங்களாக ரகசியமாக உளவு பார்த்த தகவல் அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் Intelligence Bureau எனப்படும் ரகசிய புலனாய்வு பணியகத்தின் இரண்டு கோப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோப்புகள் மூலம், முன்னாள் இந்திய பிரதமர் நேருவின் அரசாங்கம், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது குடும்பத்தினை உளவு பார்த்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

1948ம் ஆண்டு முதல் 1968ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். மேலும், நேரு 1964ம் ஆண்டு மே 27ம் திகதி இறந்த பின்னரும் 4 ஆண்டுகள் இந்த உளவு வேலை தொடர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உளவு அமைப்பினர், போஸின் குடும்பத்தார் எழுதிய கடிதங்களை இடைமறித்தது மட்டுமல்லாமல் அதனை நகல் எடுக்கவும் செய்துள்ளனர்.

அதேபோல் அவர்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களையும் கண்காணித்ததோடு, போஸின் குடும்பத்தார் யாரை சந்திக்கிறார்கள் அவர்களிடம் என்ன விடயம் தொடர்பாக விவாதிக்கிறார்கள் என அனைத்தையும் கண்காணித்துள்ளனர்.

பாஜக தலைவர் அக்பர் கூறுகையில், போஸின் இறப்பு பற்றி அரசாங்கம் உறுதி செய்யவில்லை என்றும், ஆனால் போஸ் 1957ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றாக அணிதிரட்டி பெரும் சவாலாக விளங்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போஸின் சகோதரனின் பேரனான சந்திர குமார் கூறுகையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் இருவருக்குள்ளும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இருவரும் நட்பாக பழகி வந்தனர். நேரு எப்போதும் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கி செல்வார். ஆனால் நேரு இவ்வாறு போஸின் குடும்பத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

மேலும், மோடி தனது அரசாங்கம் ஒரு வெளிப்படையான அரசாங்கம் என்று கூறி வருகிறார். அவர் கூறுவது உண்மை என்றால் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி விசாரணக் குழு அமைத்து நடந்த உண்மையை வெளிக் கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.