மத சுதந்திரம், மொழி சுதந்திரம் அனைவருக்கும் வேண்டும் - மட்டக்களப்பில் ஜனாதிபதி
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொழி மற்றும் மத அடிப்படையில் ஒரு நாட்டு மக்கள் வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், அவர்கள் தமது மொழியை பேசுவதற்கும் மதத்தை பின்பற்றுவதற்கும் முழுமையான சுதந்திரத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை தேவ திருச்சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மத ரீதியான நிகழ்வொன்றில் சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனை அவர் தெரிவித்துள்ளார்
நாட்டில் மொழி மற்றும் மத அடிப்படையில் வேறுபாடுகளை கொண்டுள்ள மக்களிடையே நம்பிக்கையையும் சக வாழ்வையும் கட்டியெழுப்புவதே தனது அரசாங்கத்தின் இலக்கு என்றும் கூறினார். கடந்த 30 வருட கால யுத்தத்தை தனது உரையில் நினைவு படுத்திய ஜனாதிபதி, 'மீண்டுமொரு யுத்தத்திற்கு நாடு செல்வதை தடுப்பது துப்பாக்கியும் குண்டுகளும் அல்ல' என்றார்
மொழி மற்றும் மத அடிப்படையில் வேறுபாடுகளை கொண்டுள்ள மக்களிடையே, நம்பிக்கையை கட்டியெழுப்பி சகலருக்கும் நியாயம் கிடைக்க செய்வதன் மூலமே அதனை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஸ்கா நிகழ்வில் ஜனாதிபதியுடன் கிழக்கு மகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் , மத்திய அமைச்சர் ரஊஃப் ஹக்கீம் மற்றும் துணை அமைச்சர் அமீர் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.








