மணல் ராஜா மற்றும் ராஜகுமாரர்கள் – மவ்பிம
மைத்திரிபால ஜனாதிபதி ஆனவுடன் பொலன்னறுவையில் மணல் அகழ்வுக்கான அனுமதி பத்திரங்களை இரத்து செய்திருந்தார். அது மைத்திரியின் தம்பியின் வயிற்றில் அடிக்கும் சம்பவமாகவே இருந்தது. ஆனால்; தம்பி அண்ணன் மைத்திரியிடம் தன் துன்ப துயரங்களை பற்றி சொல்ல செல்லவில்லை. ஏனென்றால் மைத்திரிடம் தனக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்காது என்பது பற்றி அவர் அறிந்திருந்தார். கடந்த வியாழக்கிழமை பிரியந்த சிறிசேனவின் கழுத்தில் கூரிய ஆயுத்தால் தாக்குதல் நடத்தப்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்று அறியக்கிடைத்தது.
இந்த சம்பவத்தின் பின்னர் மக்களின் மனதில் வந்தது மகிந்த ராஜபக்சவின் தம்பிகள் பற்றிதான். மகிந்தவின் ஒரு தம்பி பசில் அடுத்தவர் கோத்தபாய. பசில் ஜனாதிபதி என்ற தோற்றத்தில் தான் பாதுகாப்பு பிரிவினர் புடைசூழ இருந்தார். கோத்தபாய பாதுகாப்பு செயலாளராக பாதுகாப்பு பிரிவினர் புடைசூழ இருந்தார். மகிந்தவின் சகோதரிகளுக்கும், சகோதரிகளின் கணவன்மாருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர்களின் பிள்ளைகள் அரச நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்தமையினால் அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மகிந்தவின் மனைவி சிராணியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் ராஜபக்ச என்ற பெயர் தொட்டுச் சென்றாலும் அவர்களும் அரசபதவிகளை பெற்று பாதுகாப்பு படையினர் புடைசூழ சென்றனர்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின் அவரின் சகோதர சகோதரிகள் பற்றி கேள்விப்படவே இல்லை. மைத்திரியின் குடும்பத்தில் பிரபலமாக இருந்தவர் டட்சி சிறிசேன. மைத்திரியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது அவர் மைத்திரிக்கு உதவிபுரிந்திருந்தார். ஆனாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அவர் பற்றி அறியக்கிடைக்கவில்லை. ஜனாதிபதியிடம் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக இவர் நாடுபவர்களிடம் இவர் சொல்வது என்னவென்றால் எனக்கே எதுவும் செய்து கொள்ள முடியாத பொழுது நான் எப்படி உங்களுக்கு உதவி புரிய முடியும் என்று. அவர் ஒரு தடவை ஜனாதிபதி மாளிகையை பார்க்க சென்றிருக்கின்றார். மைத்திரி அவரிடம் ‘நன்றாக சுற்றி பார்த்தீர்களா?” என்று கேட்க, ‘ஆம்” என்று பதில் சொல்லிவிட்டு தன் வீடு நோக்கி வந்து விட்டார்.
ஆனால் மகிந்த, டட்லியின் பெயரை மட்டுமல்ல மணல் வியாபாரம் செய்யும் தம்பியின் பெயரையும் இழுத்து மைத்திரிக்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். மகிந்த நாட்டு மக்களிடம் சொல்ல வந்திருந்தது என்னவென்றால் என் சகோதரர்கள் போன்றவர்களல்ல மைத்திரியின் சகோதரர்கள் அவர்கள் இந்த நாட்டையே சப்பி தின்று விடுவார்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால் மகிந்த பதிவியேற்ற பின் தன் ஒரு சகோதருக்கு மட்டுமே அரசபதவியொன்றை வழங்கியிருந்தார். இது குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போதும் அவர் மைத்திரி ஜனாதிபதி பதவிக்கு வரும் முன்னரே சந்திரிக்கா மற்றும் மகிந்த அரசுகளில் பணிப்பாளராக, இயக்குனராக அரசு நிறுவனங்களில் கடமையாற்றியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாச பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்த காலங்களில் தனது சகோதர, சகோதரிகளுடன் தொடர்புகளை வைத்திருக்கவில்லை. அதுக்கு ஒரு காரணமிருந்தது. அது என்னவென்றால் பிறேமதாச எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த காலத்தில் ஒரு சகோதரியால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக. இந்த பிரச்சினை என்னவென்று பிறேமதாச அரசாங்கத்தில் இருந்த சிறிசேனகுரே இவ்வாறுதான் வெளிப்படுத்தியிருந்தார்.
’70 களின் தொடக்கத்தில் அபூர்வமான சம்பவமொன்று நடந்தது. அந்த சம்பவம் பிறேமதாச அவர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது. அந்தக்காலத்தில் பிறேமதாசவின் சகோதரி லஞ்சம் பெற்றாரென குற்றஞ்சாட்டப்பட்டது. அதைக் கேள்விப்பட்ட பிறேமதாச நன்றாக மனம் உடைந்து போய்விட்டார். நான் அவர் இவ்வாறு மனமுடைந்து போனதை என் வாழ்க்கையில் இதற்கு முன்னர் கண்டதில்லை. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது கூட அவர் இப்படி இருக்கவில்லை. அவர் தன் சகோதரி செய்த தவறு என்னவென்று கூட அவர் அறிந்திருக்கவில்லை. அவர் தன் வீட்டில் தங்கியிருக்கும் சகோதரி எதாவது தவறு செய்திருக்கலாம் என்று நினைத்தார்.
தான் அந்த தவறை அறிந்திருக்கவில்லை என்பதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதை அவரின் மனம் சொன்னது. அவர் எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மைக்கு மட்டுமே முதலிடம் கொடுத்தார். அவரின் கொள்கைகளை விட முக்கியத்துவத்தை கொடுத்தது நேர்மைக்கும், நம்பிக்கைக்கும் தான். அதனால் தான் தன் சகோதரி லஞ்சம் பெற்றார் என்று குற்றஞ்சாட்டு காரணமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக தீர்மானித்தார். அந்த காலத்தில் லஞ்சம் பெறுதல் பாரதூரமான குற்றமாகும். ‘நான் கட்டியெழுப்பிய அனைத்தும் இல்லாமல் போன மாதிரி” என்று ரணசிங்க பிறேமதாச தெரிவித்தார். எனக்கு இன்றும் அந்த நாள் ஞாபகத்தில் உள்ளது.
அன்றைய தினம் காலையில் எனக்கு தொலைபேசி அழைப்பொன்றினை மேற் கொண்டு உடனே என்னை வந்து சந்திக்கும் படி கூறினார். அவர் அவசரம் என்று சொன்னதன் காரணமாக உடனே புறப்பட்டு சென்றேன். அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவர் தலையை கூட வாராமல் ஒரு பெனியனை அணிந்திருந்ததை அன்று தான் நான் முதன் முதலாக கண்டேன்.
‘நீங்கள் பத்திரிகையை வாசித்தீர்களா? என்று என்னிடம் கேட்டார். நான் ஆம் என்று சொல்ல, இந்த செய்தியை வாசித்தீர்களா என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன். நீங்கள் இந்த செய்தியில் யாரைப் பற்றி குறிபிட்டு இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டார். ‘எனக்கு தெரியவில்லை. ஆனால் சுகதாசவின் சகோதரியை பற்றி சொல்லியிருக்கின்றார்கள் என்று நினைத்தேன்” என்று சொன்னேன். ‘இல்லை என் தங்கையை பற்றி தான் சொல்லியிருக்கின்றார்கள்.” என்று அவர் சொன்னார். அத்துடன் அவர் சொன்னார் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக. ‘ஏன் நீங்கள் அப்படியான தன்னிச்சையான முடிவை எடுத்தீர்கள். இந்த பத்திரிகையில் சொல்லப்பட்டிருப்பது முன்னாள் அமைச்சரின் சகோதரி என்று தான். பெயர் கூட சொல்லப்படவில்லை. இதில் சொல்லப்பட்டிருப்பது உங்கள் சகோதரி பற்றி என்று நான் அறிந்திருக்கவும் இல்லை.” என்று நான் சொன்னேன்.
‘நான் பாராளுமன்றத்தில் அமர்வது டட்லி மற்றும் ஜே.ஆர் உடன். அவர்கள் இந்த பத்திரிகையை வாசிப்பார்கள். இவர் யார் இந்த முன்னாள் அமைச்சர் என்று சந்தேகத்தை வெளியிடுவார்கள். நான் அறிவேன் என்று என்னிடம் கேட்பார்கள். அப்ப நான் என்ன சொல்வது. நான் எனக்கு தெரியாது என்று சொல்வதா? எனக்கு உண்மையை சொல்ல வேண்டி வரும்.”அவர் தொடர்ச்சியாக கதைத்தார்.
‘நீங்கள் எப்படி இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது உங்கள் தங்கை தானென்று சொல்வீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன். ‘இன்று காலையில் என்ன சம்பவம் நடந்ததென்று நீங்கள் அறிவீர்களா? இந்த செய்தியை கண்டதும் நான் தடுமாற்றம் அடைந்து விட்டேன். நான் தங்கையை வரச் சொன்னேன். எனது தாயார் சொன்னார் தங்கை நேற்று அத்தை வீட்டுக்கு போனவர் இன்னும் வரவில்லை என்று சொன்னார். இது பற்றி நான் சிந்தித்தேன். தங்கை ஏதாவது தப்பு செய்திருக்கின்றார் என நான் உணர்ந்தேன். நான் மாமி வீட்டுக்கு தொடர்பினை மேற்கொண்டு தங்கையுடன் கதைத்தேன்.
பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது உங்களை பற்றியா என்று கேட்டேன். அவர் அழத் தொடங்கிவிட்டார். அப்போதுதான் நான் அறிந்து கொண்டேன். என் கையில் இருந்து தொலைபேசி விழுந்துவிட்டது. என்னால் பேச முடியாமல் போய் விட்டது. அவர்கள் இதைப்பற்றியறிந்தால் என்னை பற்றி என்ன நினைப்பார்கள். நான் சுயவிருப்பில் விலகப் போகின்றேன் என்று அவர் சொன்னார்.
நான் அந்த முடிவுக்கு எதிப்பு தெரிவித்தேன். அந்த முடிவால் அவரின் அரசியல் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என நான் நினைத்தேன். ‘இது தவறை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஆகும். நாங்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இக்கதையை கூறுவோம். இது குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தும் படி கேட்டுக் கொள்வோம். அது விலகுவதை விட சிறந்தது…”
நான் அவரிடம் சொன்னேன் ‘இது உங்கள் தங்கையை மாட்டிவிட்டு உங்கள் மீது மேற் கொள்ளப்படும் சேறு பூசும் நடவடிக்கையாக கூட இருக்கலாம் என்று சொல்ல முடியுமா? நாங்கள் அந்த பக்கத்தையும் யோசிக்க வேண்டும். சிலவேளைகளில் உங்கள் தங்கையை பாவித்து உங்கள் மீது சேறு பூசுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக கூட இருக்கலாம். நான் அவருக்கு புரிய வைத்தேன். அவர் அந்த சந்தர்ப்பத்தில் அதை ஏற்றுக் கொண்டார்.
நாங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக உரை ஒன்றை தயாரித்தோம். நான் தான் அதை தட்டச்சு செய்தேன். அந்த நாட்களில் பாராளுமன்றம் சனிக்கிழமைகளிலும் கூடும். நாங்கள் ஒரு சனிக்கிழமை தான் சென்றோம். நாங்கள் பாராளுமன்ற செயலாளரை சந்தித்தோம். பிறேமதாச அவர்கள் சம்பவத்தை சொல்லி பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரினார். ‘நீங்கள் ஏன் இதை செய்ய வேண்டும்?” என்று செயலாளர் கேட்டார். டட்லி மற்றும் ஜே.ஆர் இடம் கூறிய போதும் அவர்களும் அதைத்தான் கேட்டார்கள். அவர்கள் பிறேமதாச அவர்களின் நேர்மைத் தன்மையை புரிந்துக் கொண்டார்கள். ஆனால் அவர் தன் முடிவை மாற்றவில்லை. சபாநாயகரிடம் அனுமதி பெற்று அந்த உரையை அவர் ஆற்றினார்.
தன் சகோதர சகோதரிகளினால் பிறேமதாசவை போன்று மைத்திரிக்கு பிரச்சினைகள் ஏற்படாத போதும் மைத்திரி தன் சகோதரர்களை ஜனாதிபதியின் தம்பி ஆக்க முனையவில்லை. இந்த கோடாரி தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தெரியவருவதாவது ராசபக்சாக்களின் சகோதர நிறுவனத்திற்கும் மைத்திரி சகோதர நிறுவனத்திற்கும் இடையிலான வித்தியாசம்.
மவ்பிம பத்திரிகைக்காக – உபுல் ஜோசப் பிரனாந்து
தமிழில் – ஜீவிதன்








