Breaking News

சரண்ஜாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டது!

கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியமையால் உயிரிழந்தார் என சந்தேகிக்கப்படும் கனகரா யன்குளத்தைச் சேர்ந்த செல்வராஜா சரண்ஜா (வயது16) என்ற சிறுமியின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மன்னகுளம் மயானத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. 

வவுனியா, கனகராயன்குளம், மன்னகுளத்தில் வசித்து வந்த செல்வராஜா சரண்ஜா கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்தார். சுகவீனம் காரணமாக இவர் மரணமானார் என்ற போதும் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமையே சிறுமி உயிரிழக்கக் காரணம் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என உறவினர்கள் பொலிஸாரிடம் கூறினர். 

சிறுமியின் மரணம் தொடர்பாக வைத்திய அறிக்கையிலும் குழப்பநிலை காணப்பட்டது. இதையடுத்து சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் நீதிமன்றத்தினால் மார்ச் மாதம் 6 ஆம் திகதி சடலத்தை தோண்டியெடுத்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டடிருந்தது. 

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மன்னகுளம் மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட நீதிவான் முகமட் ரிஸ்வான், யாழ். மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் ருத்திரபதி மயூரதன், கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது. 

உறவினர்களின் அடையாளப்படுத்தலின் பின்னர் சடலம் அடையாளம் காண்பதற்காக பார்வையிடப்பட்டதன் பின்னர் கனகராயன்குளம் பொலிஸாரால் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதேவேளை, மருத்துவ பரிசோதனை முடிந்ததும் உறவினர்களின் கிரியைச் சடங்குகளுக்காக சடலத்தை மீள உறவினர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு நீதிவான் அறிவுறுத்தியிருந்தார்.