Breaking News

முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரிவசூலிப்பாளராக பணியாற்றியவரை கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு, கனேடிய சமஷ்டி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான புவனேசன் துரைராஜா என்பவரை போர்க்குற்றவாளி என்று கூறி, அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப, கனேடிய அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

ஆனால்,அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது ஆபத்தானது என்று கூறி, கனேடிய உயர்நீதிமன்ற நீதிபதி சீன் ஹரிங்டன் அந்த முடிவுக்குத் தடைவிதித்துள்ளார். இந்த உத்தரவு கனேடிய உயர்நீதிமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புவனேசன் துரைராசாவைத் திருப்பி அனுப்புவதால், அவர் இலங்கையில் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளமாட்டார் என்ற கனேடிய குடியுரிமை மற்றும் குடிவரவு த்துறையின் மதிப்பீட்டையும் நீதிபதி நிராகரித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரி வசூலிப்பாளராக இருந்த புவனேசன் துரைராஜா, பின்னர் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியிருந்தார்.

அங்கு அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதையடுத்து, போலிக் கடவுச்சீட்டில் கனடா வந்திருந்தார். விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற அடிப்படையில், போருக்காக அவர் வரிவசூலித்தார் என்ற குற்றச்சாட்டில், கனேடிய அதிகாரிகளை அவரை நாடு கடத்த உத்தரவிட்டனர்.

புவனேசன் துரைராஜா, விடுதலைப் புலிகளின் ஆவண பணியகம் மற்றும் நிதிப்பிரிவில் பணியாற்றியிருந்தார். இவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவர் ஆபத்தை எதிர்கொள்வார் என்றும், நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.