Breaking News

ஆட்டம் காணுமா புதிய அரசு? -சி.சிறிதரன்


நாட்டில் அதி­ர­டி­யாக ஏற்­பட்ட ஆட்சி மாற்றம்,
மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­றத்­தக்க வகையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றதா என்­பது கேள்­விக்­கு­றிக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றது.

நூறு நாள் வேலைத்­திட்டம் ஒன்றை முன்­வைத்து ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறிசேன அணி­யி­ன­ருக்கு மக்கள் ஆத­ரவு வழங்­கி­னார்கள். அந்த ஆத­ரவின் மூலம், வேட்­பா­ள­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யானார். அதே­போன்று தேர்­த­லுக்கு முன்னர் வாக்­க­ளித்­தி­ருந்­த­தன்­படி, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அவர் பிர­த­ம­ராக்­கினார்.

தேர்தல் கால வாக்­கு­று­தியின் படி, 100 நாள் வேலைத்­திட்­டத்­திற்கு அமை­வாக நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் புதிய அர­சாங்கம் ஈடு­பட்­டி­ருந்­தது. அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலைகள்; குறைக்­கப்­பட்­டன. முன்­னைய ஆட்­சி­யா­ளரைப் போன்று, இரா­ணு­வத்­தி­ன­ருக்கு புதிய அர­சாங்­கத்­தினால் அதிக முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால், இரா­ணுவ மய­மாக்கல் நிலை­மையில் சிறிது தளர்வு ஏற்­பட்­டி­ருந்­தது.

இரா­ணுவ பலத்­தினால், அச்­ச­முற்­றி­ருந்த மக்­களும், அர­சி­யல்­வா­தி­களும் ஓர­ளவு நிம்­ம­தி­ய­டைந்­தனர். ஊழல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற உறுதி மொழியை நிறை­வேற்றும் வகையில் பல விட­யங்­களில் புதிய அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்­தி­யது. விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. பல தில்­லு­முல்­லுகள், ஊழல் நட­வ­டிக்­கைகள் பற்­றிய தக­வல்கள் புற்­றீ­சலைப் போல வெளிக்­கி­ளம்­பி­யி­ருந்­தன.

முன்­னைய அரா­சங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார்கள். ஊழல் நட­வ­டிக்­கைகள், அதி­கார துஷ்­பி­ர­யோகம், முறை­யற்ற வகையில் அரச நிதிகள் கையா­ளப்­பட்­டமை என்­பன குறித்து புல­னாய்வு பிரிவினர் அவர்­க­ளிடம் விளக்கம் கேட்டு, வாக்­கு­மூ­லங்­களைப் பதிவு செய்­தார்கள். அதே­நேரம், ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு நடந்து முடிந்து முடி­வுகள் வெளி­யா­கிக்­கொண்­டி­ருந்த வேளை, சதி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­தாக முன்னாள் ஜனா­தி­பதி உள்­ளிட்ட பல­ருக்கு எதி­ராகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்­கி­டையில் நீதி­நெறி, ஆட்சி நெறி­மு­றை­களை அப்­பட்­ட­மாக மீறி, பத­வியில் இருந்து பலாத்­கா­ர­மாகத் தூக்­கி­யெ­றி­யப்­பட்ட முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவை புதிய அரசு மீண்டும் பிர­தம நீதி­ய­ர­ச­ராக்­கி­யது. முன்­னைய ஆட்­சியில் அர­சியல் செல்­வாக்கின் மூலம் பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மனம் பெற்­றி­ருந்த மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் செய்­யப்­பட்டார்.

அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உள்­ளாகி, நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யென்ற பதவி அந்­தஸ்­துக்­கு­ரிய மதிப்பு மரி­யா­தைகள் அனைத்தும் பறித்­தெ­டுக்­கப்­பட்டு, அவ­ம­ரி­யா­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் இரா­ணுவ தள­பதி ஜெனரல் சரத் பொன்­சே­காவின் அந்­தஸ்­துகள் அனைத்தும் புதிய அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டன. அத்­துடன் அதி­யுயர் கௌர­வ­மா­கிய பீல்ட் மார்ஷல் பதவி வழங்கி அவர் கௌர­விக்­கப்­பட்டார்.

எளி­மை­யையும்:, பணி­வையும் பின்­பற்றி, அரச பத­வியில் மக்­க­ளுக்­கான சேவையை முதன்­மைப்­ப­டுத்தி புதிய தலைமைப் பண்பை அறி­மு­கப்­ப­டுத்­திய பெரு­மையை புதிய ஜனா­தி­பதி முதற்­த­ட­வை­யாக நாட்டில் நிலை­நாட்­டினார். சட்டம் ஒழுங்கை அனை­வரும் பேண வேண்டும் என்­ப­தற்கும் முன்­னு­தா­ர­ண­மாக நடந்து காட்டி, மக்­களின் மனங்­களில் அவர் இடம்­பி­டித்தார். அது மட்­டு­மல்­லாமல், சர்­வ­தேச ரீதியில் இலங்கை அர­சாங்கம் எதிர்­நோக்­கி­யி­ருந்த, மனித உரிமை மீறல், போர்க்­குற்றச் செயல்கள் என்­ப­வற்­றிற்கு பொறுப்பு கூறும் விட­யத்தில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் ஏற்­பட்­டி­ருந்த நெருக்­க­டியைத் தளர்த்­து­வ­திலும் புதிய ஜனா­தி­பதி வெற்றி பெற்­றுள்ளார்.

இலங்­கைக்கு எதி­ராக மார்ச் மாதம் நடை­பெற்ற ஐ.நா.வின் மனித உரிமைப் பேர­வையில் கொண்­டு­வரப்பட­வி­ருந்த முக்­கிய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதை செப்­டம்பர் மாதம் வரையில் பின்­போடச் செய்­ததன் மூலம், இந்த வெற்றி சாத்­தி­ய­மா­யிற்று. முட்­டுக்­கட்­டைகள் எதிரும் புதி­ரு­மாக இருந்து செயற்­பட்டு வந்த ஐக்­கிய தேசிய கட்­சி­யையும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் இணைத்து தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக மேற்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் முயற்சி, ஐக்­கிய அர­சாங்கம் ஒன்­றி­லேயே சென்று முடி­வ­டைந்­துள்­ளது.

நாட்டில் ஜன­நா­ய­கத்தை மேம்­ப­டுத்தி நல்­லாட்­சியை உரு­வாக்க வேண்டும் என்ற அவ­ரு­டைய கனவு எதிர்­பார்த்த அளவில் வெற்றி தர­வில்லை. ஆயினும் நாட்டின் முக்­கிய இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­க­ளையும் (அரை­கு­றை­யாக இருந்த போதிலும்) தனது தலை­மையின் கீழ் ஒன்­றி­ணைப்­பதில் அவர் வெற்­றி­ய­டைந்­துள்ளார். ஆயினும் இந்த வெற்­றி­யும்­சரி, நல்­லாட்­சிக்­கான அவ­ரு­டைய ஏனைய முயற்­சி­களும் சரி, சிங்­கள மக்கள் மத்­தியில் ஏகோ­பித்த ஆத­ரவைப் பெறத் தவ­றி­யுள்­ளது என்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

பல்­வேறு ஊழல்கள். மிகப் பெரும் அள­வி­லான அரச நிதி மோச­டிகள், அதி­கார துஷ்பி­ர­யோகம், குடும்­பத்­தினர், குடும்ப உற­வி­னர்­க­ளுக்கு அரச பத­வி­க­ளையும், அரச வளங்­க­ளையும் அள்ளித் தந்­தி­ருந்து மோச­மான மோச­டிகள் போன்ற பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆளா­கி­யி­ருந்த போதிலும், முன்னாள் ஜனா­தி­ப­தியின் அர­சியல் செல்­வாக்கை உடைத்து நொறுக்­கு­வதில் புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற முடி­யாத நிலை­மையே நீடிக்­கின்­றது.

நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்கி புதிய அர­சியல் கலா­சா­ரத்தைக் கொண்டு வரு­வ­தற்­கான அவ­ரு­டைய முயற்­சிக்கு முன்னாள் ஜனா­தி­ப­தியின் முறிந்து போகாத அர­சியல் ஆத­ரவும் அர­சியல் செல்­வாக்கும் பெரும் சவால்­க­ளாக எழுந்து நிற்­ப­தையும் காண முடி­கின்­றது. நாட்டில் நில­விய சர்­வா­தி­காரப் போக்கை மாற்றி, மக்­க­ளுக்கு இயல்பு நிலை­யி­லான ஒரு வாழ்க்கைச் சூழலை ஏற்­ப­டுத்திக் கொடுத்த போதிலும், பயங்­க­ர­வா­தி­க­ளாகச் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்ள விடு­த­லைப்­பு­லி­களைத் தோற்­க­டித்­துள்ள யுத்த வெற்­றி­வா­தத்­தையும், தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாத அர­சியல் போக்­கையும் புதிய ஜனா­தி­ப­தி­யினால் அசைக்க முடி­ய­வில்லை.

இதன் கார­ண­மா­கத்தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அரச பத­வியை இழந்­துள்ள போதிலும், சிங்­கள மக்கள் மத்­தியில் இன்னும் செல்­வாக்கு பெற்­ற­வ­ராகத் திகழ்­கின்றார். இந்த அர­சியல் செல்­வாக்­கா­னது, நிறை­வேற்று அதி­கார பலம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையில் ஜனா­தி­ப­திக்கு உள்ள வரை­ய­றை­யற்ற அதி­கா­ரங்­களைக் குறைத்து, நாட்டில் பிர­த­மரின் அதி­கா­ரங்­க­ளையும், பாரா­ளு­மன்­றத்தில் நிர­வாக பலத்­தையும் அதி­க­ரிக்கச் செய்­வ­தற்­கான அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தைக் கொண்டு வரு­வதில் சிக்­கல்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்­துடன், நாட்டின் தேர்தல் முறை­மையில் சீர்­தி­ருத்­தங்­களைக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சிக்கும், முன்னாள் ஜனா­தி­ப­தியின் அர­சியல் செல்­வாக்கு முட்­டுக்­கட்டை போட்­டி­ருக்­கின்­றது.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தையே சீர்­கு­லைக்­கத்­தக்க வகையில் அமைந்­தி­ருந்த முன்­னைய அர­சாங்­கத்தின் நிதி கையாள்கை நட­வ­டிக்­கைகள், குடும்­பத்தின் அர­சியல் செல்­வாக்­கிற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த முறை­கே­டான நட­வ­டிக்­கைகள், சர்­வா­தி­கா­ரத்தை நோக்­கிய ஆட்சிப் போக்கு, நாட்டின் எதிர்­கால சுபீட்­சத்­திற்கு விரோ­த­மான அர­சியல் மற்றும் நிர்­வாக நட­வ­டிக்­கைகள், முழு நாட்­டையும் இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­த­லுக்­கான செயற்­பா­டுகள், சீனா, பாகிஸ்தான் போன்ற, அயல் வீட்டு நட்பு நாடா­கிய இந்­தி­யா­வுக்கு விரோ­தி­க­ளான நாடு­க­ளு­ட­னான அர­சியல் இரா­ணுவ பொரு­ளா­தார ஒத்­து­ழைப்புச் செயற்­பா­டுகள் போன்ற நாட்டின் எதிர்­கால சுபீட்­சத்­திற்குப் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தத்­தக்க அர­சியல் கொள்கைப் போக்கைக் கொண்­டி­ருந்த போதிலும், முன்­னைய ஜனா­தி­ப­தியின் அர­சியல் செல்­வாக்கை அடித்து நொறுக்க முடி­யாத பல­வீ­ன­மான நிலை­மை­யி­லேயே புதிய ஜனா­தி­ப­தியும் புதிய 100 நாள் வேலைத்­திட்டம் கொண்ட அர­சாங்­கமும் காணப்­ப­டு­கின்­றது.

இந்த அர­சியல் பல­வீனம் 100 நாட்­களின் பின்னர் நடத்­தப்­ப­டப்­போ­கின்ற பொதுத்­தேர்­தலில் எந்த அள­விற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­பது தெரி­ய­வில்லை. வரப்­போ­கின்ற பொதுத் தேர்­தலில் புதிய ஜனா­தி­ப­தியின் தலை­மை­யி­லான அர­சியல் அணியை, பொது­மக்கள் எவ்­வ­ளவு தூரத்­திற்கு ஆத­ரிக்கப் போகின்­றார்கள் என்­பது குறித்து பல­த­ரப்­பி­னரும் சிந்­திக்கத் தலைப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

ஜனா­தி­பதி தேர்­தலின் ஊடாக நாட்டில், ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்தி, ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி ஆகிய இரு­கட்­சிகள் இணைந்த ஓர் அர­சாங்­கத்தை உரு­வாக்கி வெற்­றி­கண்ட போதிலும், பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­திற்கு ஆணி­வே­ரா­கிய எதிர்க்­கட்சித் தலைவர் யார் என்ற கேள்­விக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான அர­சியல் போக்கில் பதில் கிடைக்­க­வில்லை.

ஆட்­சியில் உள்ள கட்­சி­யி­னரே எதிர்க்­கட்­சி­யி­ன­ரா­கவும், அவர்­களில் ஒரு­வரே எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்­கின்ற புது­மை­யான ஜன­நா­யகக் காட்­சி­யொன்று இந்த அர­சாங்­கத்­தி­லேயே அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. 

பிர­தான எதிர்க்­கட்­சி­யாக இருந்த கட்­சி­யையும் அர­சாங்­கத்தில் இணைத்து ஐக்­கிய அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்­கிய பின்னர், எதிர்க்­கட்சி எது, எதிர்க்­கட்சித் தலைவர் யார் என்ற கேள்­விக்கு சாதா­ரண நடை­மு­றையில் மட்­டு­மல்­லாமல் ஜன­நா­யக நடை­மு­றை­யி­லும்­கூட பதி­ல­ளித்துச் செயற்­பட முடி­யாத அளவில் புதிய அர­சாங்­கத்தின் ஜன­நா­யகப் போக்கு குழப்பம் நிறைந்­த­தாகக் காணப்­ப­டு­கின்­றது.

அலைக்­க­ழிக்கும் அதி­ருப்­திகள் சர்­வா­தி­கார ஆட்­சிக்கு முற்­றுப்­புள்­ளி­யிட்டு, ஜன­நா­ய­கத்தை உயிர்ப்­பித்த போதிலும், ஜனா­தி­பதி தேர்தல் காலச் சூழலில் ஜன­நா­யக விரோதச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து, பத­வியைத் தக்­க­வைப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன என்று புதிய அர­சாங்­கத்தின் தூண்­களில் ஒரு­வ­ரா­கிய வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர புல­னாய்வு பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­டி­ருந்தார்.

அந்த முறைப்­பாடு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு, விசா­ர­ணை­களும் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்­தன. ஆயினும் சந்­தே­கத்­திற்கு உரி­ய­வர்­க­ளாகக் கரு­தப்­பட்­ட­வர்கள் மீது விசா­ர­ணை­யா­ளர்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட­வில்லை. அவ்­வாறு சந்­தே­கப்­பட்­டி­ருந்தால், அவர்­களை பொலிஸார் கைது செய்­தி­ருப்­பார்கள். ஆனால் இந்த முறைப்­பாடு தொடர்பில் எவ­ருமே கைது செய்­யப்­ப­ட­வில்லை.

தேர்தல் முடி­வுகள் வெளி­யாகிக் கொண்­டி­ருந்த அந்த அகால வேளையில், முன்னாள் ஜனா­தி­ப­தி­யோடு,; முன்னாள் பிர­தம நீதி­ய­ர­சரும் வேறு சில­ரோடு இருந்தார் என்­பது வெளிச்­சத்­திற்கு வந்­தி­ருந்­தது. இது தொடர்பில் ஏனைய முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் அவரும் விசா­ரணை செய்­யப்­பட்­டி­ருந்தார் என்றும், தேர்தல் முடி­வு­க­ளுக்கு விரோ­த­மான முறையில் அதி­க­ரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சதி முயற்சி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன என்றும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

ஆனால், இந்த விசா­ர­ணை­களின் முடிவு என்ன, தொடர் நட­வ­டிக்­கை­யாக என்ன நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன, சந்­தே­கத்­திற்கு உரி­ய­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதா, இந்த விடயம் தொடர்பில் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டதா என்­பது போன்ற பல­த­ரப்­பட்ட கேள்­வி­களை அர­சியல் விமர்­ச­கர்கள் எழுப்­பி­யி­ருக்­கின்­றார்கள். நல்­லாட்­சி­யையும், ஜன­நா­ய­கத்­தையும் கொண்டு வரப்­போ­வ­தாக சூளு­ரைத்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்த புதிய 100 நாள் அர­சாங்கம், ஜன­நா­யக ஆட்­சிக்கு அடிப்­ப­டை­யான, சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டும் வகையில் இந்த சதி­மு­யற்சி குற்­றச்­சாட்டு விவ­கா­ரத்தில் ஏன் உறு­தி­யாகச் செயற்­ப­ட­வில்லை என்றும் அவர்கள் வின­வி­யி­ருக்­கின்­றார்கள்.

இது ஒரு­பக்கம் இருக்க, காலி துறை­மு­கத்தில் மிதந்து கொண்­டி­ருந்த கப்பல் ஒன்றில் ஏகப்­பட்ட ஆயு­தங்கள் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்று சந்­தே­கிக்­கத்­தக்க வகையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டமை, பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரினால், கையா­ளப்­பட்­டி­ருந்த கற்­பனை செய்ய முடி­யாத அளவில் பெருந்­தொகை நிதி முறை­யற்ற விதத்தில் கையா­ளப்­பட்­டி­ருந்த நட­வ­டிக்கை என்­ப­னவும் இது போன்ற இன்னும் பல நிதி­மோ­சடி நோக்­கத்­தி­லான நிதிக் கையாள்­கைகள், ஊழல்கள் மோச­டிகள் தொடர்­பாக நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­களில் சந்­தேக நபர்கள் ஏன் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்றும் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றன.

இத்­த­கைய கேள்­விகள், ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்தி நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தப் போவ­தாகத் தெரி­வித்த மைத்­தி­ரி­பால அணி­யி­னரின் அர­சியல் நோக்­கங்­க­ளையே வரப்­போ­கின்ற பொதுத் தேர்­தலில் ஆட்டம் காணச் செய்­து­வி­டுமோ என்றும் சில தரப்­பினர் அச்சம் வெளி­யிட்­டி­ருக்­கின்­றார்கள். இது ஒரு புற­மி­ருக்க, புதிய ஆட்­சியை உரு­வாக்­கு­வ­தற்­காக ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்த சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தி­னரும், அரசு மீது அதி­ருப்­தி­ய­டைந்­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன அணி­யினர் தம்­மு­டைய 100 நாள் வேலைத்­திட்­டத்தில் சிறு­பான்­மை­யின மக்­களின் பிரச்­சி­னை­களை உள்­ள­டக்­க­வில்லை என்­பது ஆரம்­பித்தில் மிக முக்­கி­ய­மாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. ஆயினும், 100 நாள் வேலைத்­திட்­டத்தை நிறை­வேற்­று­கின்ற காலப்­ப­கு­தியில் முக்­கி­ய­மாக யுத்­தத்­தினால் மிக மோச­மகாப் பாதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­களின் பிரச்ச்p­னைகள் சில­வற்றின் மீது அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யி­ருந்­தது.

அதில் சிறிய அளவில் ஏற்­பட்­டி­ருந்த முன்­னேற்­றத்தை அவர்கள் வர­வேற்­றி­ருக்­கின்­றார்கள். ஆயினும் எரியும் பிரச்­சி­னை­க­ளான இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள காணி­களைக் கைவி­டுதல், காணாமல் போயுள்­ள­வர்கள், இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்து காணாமல் போயி­ருப்­ப­வர்கள், உரிய நட­வ­டிக்­கை­க­ளின்றி சிறைச்­சா­லை­களில் நீண்ட நாட்­க­ளாக அடைத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை போன்ற விட­யங்­களில் அவர்கள் அரசு மீது அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.

காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான உள்­ளக விசா­ர­ணை­களை பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முற்­றாக நிரா­க­ரிக்கும் அள­விற்கு இந்த அர­சாங்­கத்­தி­லேயே அதி­ருப்தி மேலோங்­கி­யி­ருக்­கின்­றது. நம்­பிக்­கை­யற்ற உள்­ளக விசா­ர­ணையைக் கைவிட்­டு­விட்டு சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்று அவர்கள் போராடி வரு­கின்­றார்கள்.

முன்­னைய அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களில் எந்­த­வி­த­மான மாற்­றங்­க­ளையும் செய்­யாமல், அப்­ப­டியே ஏற்­றுக்­கொண்டு, மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற விசா­ர­ணை­களில் தாங்கள் பங்கு கொள்ளப் போவ­தில்லை, சாட்­சி­ய­ம­ளிக்க மாட்டோம் என்று உறு­தி­யாகத் தெரி­வித்து அதற்­க­மை­வாக அந்த விசா­ர­ணை­களைப் புறக்­க­ணித்­தி­ருக்­கின்­றார்கள்.

இதனால், திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில்; அந்த விசா­ர­ணைக்­கு­ழுவின் அமர்­வுகள் பய­னற்­ற­தா­கி­யி­ருக்­கின்­றன. உள்­ளக விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு உள்ளூரில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­க­ளுக்கு மேலும் வலு­வூட்­டத்­தக்க வகையில் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் ஒத்­து­ழைக்க வேண்டும், அத்­த­கைய ஒரு விசா­ர­ணையை நடத்த அரசு முன்­வர வேண்டும் என்றும், இதன் மூலம் மாத்­தி­ரமே யுத்­தத்தின் பின்­ன­ரான நல்­லி­ணக்­கத்தை நாட்டில் உரு­வாக்க முடியும் என்று ஐநா மற்றும் சர்­வ­தேச நாடு­களில் இருந்தும் அழுத்­தங்கள் இப்­போது வந்­துள்­ளன.

முன்­னைய அர­சாங்­கத்தின் இரா­ணுவ மய­மாக்கல் செயற்­பாட்டில் புதிய அர­சாங்கம் தளர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்ள போதிலும், புனர்­வாழ்வுப் பயிற்­சி­களின் பின்னர் சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் மீதான கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும், அவர்கள் தொடர்ச்­சி­யாகப் பின்­தொ­ட­ரப்­ப­டு­வ­தா­கவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் நேர­டி­யா­கவே முறை­யிட்­டி­ருக்­கின்­றார்கள்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து 1000 ஏக்கர் காணிகளை புதிய அரசாங்கம் படிப்படியாக விடுவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அறிவிக்கப்பட்ட வகையில் விடுவிக்கப்படவில்லை என்று வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்குள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களும், மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர்கள் வரையில் பலரும் ஒரே குரலில் தெரிவித்துள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல், மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்குரிய போக்குவரத்துப் பாதைகளையும் இராணுவத்தினர் முட்கம்பி வேலியிட்டு மறித்திருப்பதாகவும், இதனால் சில இடங்களில் மீள் குடியேறிய மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேவேளை. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதாகவும், இதனால் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றம் என்பது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தத் தக்க வகையிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

எந்த வேளையிலும் உடனடியாகவோ அல்லது அடுத்த மாதத்திலோ பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய அரசியல் சூழலில் சிறுபான்மையின மக்களாகிய தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது கொண்டுள்ள அதிருப்தியும், பெரும்பான்மை இனமக்கள் மத்தியில் பெரிய அளவில் செல்வாக்கைப் பெறுவதற்குத் தவறியுள்ள நிலைமையும், பொதுத் தேர்தலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்பது தெரியவில்லை.

இந்த நிலைமைகளை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் புதிய அரசாங்கத் தரப்பினர் அரசியல் உத்திகளைக் கையாள்வதற்குத் தயாராகி வருகின்றார்களா என்பதும் தெரியவில்லை

-செல்­வ­ரட்னம் சிறி­தரன் -