Breaking News

அதி உயர்விருதை வென்றது ‘தீபன்’ திரைப்படம் (படங்கள் இணைப்பு)

பிரான்சில் நேற்றிரவு நடந்த உலகப் புகழ்பெற்ற 68வது கேன்ஸ் திரைப்பட விழாவில், முன்னாள் ஈழப்போராளியின் புலம்பெயர் வாழ்வை சித்திரிக்கும் தீபன் திரைப்படம், Palme d’Or என்ற உயரிய விருதை பெற்றுள்ளது.

பிரான்சை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஜக்குவஸ் ஓடியேட், இயக்கிய இந்த திரைப்படம், ஈழப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளி ஒருவரும், மற்றொரு தாயும் மகளும் பிரான்சில் அடைக்கலம் தேடியதில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சித்திரிப்பதாகும்.

பிரான்சில் நடந்து வந்த 68வது கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபன் உள்ளிட்ட 19 திரைப்படங்கள், இந்த விழாவின் உயர் விருதான Palme d’Or விருதுக்கு போட்டியிட்டன.நேற்றிரவு நடந்த இறுதி நாள் நிகழ்வில் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் தீபன் திரைப்படத்துக்கு Palme d’Or என்ற கேன்ஸ் விழாவின் உயர் விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நாயகனாக ஜேசுதாசன் அந்தோனிதாசன், நாயகியாக காளீஸ்வரி சிறீனிவாசன், சிறுமியாக கிளாடின் விநாசித்தம்பி ஆகியோர் நடித்திருந்தனர். ஈழத்தமிழரின் அவல வாழ்வியலைக் கூறும் திரைப்படம் ஒன்று உலகின் அதிஉயர் விருதுக்குத் தெரிவாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.