உள்ளகப் பொறிமுறை குறித்த அறிக்கையை செப்டெம்பரில் ஐ.நா.வுக்கு சமர்ப்பிப்போம்!
தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பில் உள்ளக பொறிமுறையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. பொறிமுறை தொடர்பான அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கொலோன் தெரிவித்தார்.
உள்ளக விசாரணை என்பது சர்வதேசத்தை தெளிவுபடுத்தும் செயற்பாடுகளேயாகும். அதன்மூலம் இராணுவ வீரர்கள் குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்படாது. அதற்கு எமது அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினாலேயே சர்வதேசத்திற்கு பதிலளிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச் சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளோம். முன்னைய ஆட்சியின் போது சர்வதேசத்தினால் உள்ளக பொறிமுறையை ஆரம்பிக்குமாறு அழுத்தம் பிரயோகித்த போதிலும் அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறிவிட்டது.
இதன்காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க தயாராக இருந்தது. எனினும் புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் உள்ளக விசாரணை பொறிமுறையை ஆரம்பிப்பதாக வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் தற்போது எமக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிக்கையை செப்டெம்பரில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளோம்.
எமது இராணுவ வீரர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் நோக்கில் இதனை முன்னெடுக்கவில்லை. உள்ளக விசாரணை என்பது சர்வதேசத்தை தெளிவுப்படுத்தும் பொறிமுறையாகும். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை கொண்டு சர்வதேசம் எம்மை குற்றவாளி கண்ணோடு பார்க்கின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும். இதனை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகளின் அமைதி படையில் இணையவுள்ளோம். சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளை மும்முரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் திட்டம்
கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம் தொடர்பில் மீளாய்வு குழுவின் அறி க்கை கிடைத்தவுடன் இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம். எனினும் சீனாவை நாம் எந்த தருணத்திலும் புறக்கணித்து செயற்பட மாட்டோம். அனைத்து நாடுகளுடனும் புரிந்துணர்வுடன் செயற்பட உள்ளோம்.
தூதுவர் நியமனம்
தற்போது 40 நாடுகளில் இலங்கை தூதுவர்களுக்கான வெற்றிடம் காணப்படுகிறது. அதனை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.
இந்திய மீனவர் பிரச்சினை
தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் எந்தவொரு மீனவர்களும் தடுத்து வைக்கப்படவில்லை. அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயத்தில் தற்காலிக தீர்வு குறித்தும் நிரந்தர தீர்வு குறித்தும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜூன் மாத கூட்டத்தொடருக்கு உயர் தூதுக் குழுக்கள் அனுப்பப்பட மாட்டாது. மாறாக இந்த கூட்டத்தொடருக்கு ஜெனிவாவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவே கலந்து கொள்வார் என்றார்.