Breaking News

சம்பூர் கடற்படை முகாம் மாற்றப்படும்: கிழக்கு மாகாண ஆளுநர்

சம்பூரில் கட்டாய காணி பறிப்பு பிரச்சனையாக நீடித்துவந்தது திருகோணமலை மாவட்டம் சம்பூர் கடற்படை முகாமின் பயிற்சி நிலையம் வேறிடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியளார்கள் சந்திப்பின்போது கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இலங்கை கடற்படையினரின் பொறுப்பில் கடற்படையினருக்கான பயிற்சி நிலையம் அமைந்திருந்த 237 ஏக்கர் காணியும் அந்தக் காணிகளின் உரிமையாளர்களான இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் திருப்பிக் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் வியாழனன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே கிழக்கு மாகாண ஆளுனர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 

சம்பூர் கடற்படை முகாமின் பயிற்சி நிலையம் கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத் தளத்தையும் கடற்பரப்பை அண்டியதாகவும் அமைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் மீள் இணைவு அல்லது இதுபோன்ற வெளிச்சக்திகளின் பாகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இது பெரிதும் உதவி வந்துள்ளதாகத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.