ஒக்டோபர் வரை கோதாவை கைது செய்ய முடியாது! நீதிமன்ற உத்தரவால் அரசுக்கு நெருக்கடி
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை, வரும் ஒக்டோபர் மாதம் வரை கைது செய்ய முடியாத நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள நிதிக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூறி, கோத்தாபய ராஜபக்சவினால், உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நிதிக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் அரசியல் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக கோத்தபாய ராஜபக்சவின் சட்டத்தரணிகள் வாதிட்டனர். இந்தநிலையில் அவரைக் கைது செய்வதற்குத் தடை விதிக்குமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற நீதியரசர்களான, ஈவா வணசுந்தர, சரத் டி ஆப்ரூ ஆகியோர், இந்த வழக்குத் தொடர்பான இறுதியான முடிவுக்கு வரும் வரையில், கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு அடைக்காலத் தடை விதித்தனர். அத்துடன், இந்த வழக்கு வரும் ஒக்ரோபர் 6 ம் நாளே மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எனவே, அதுவுரை நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய முடியாத நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.