Breaking News

யாழ் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்தது யார்?(காணொளி)

நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற மோசமான வன்முறை
சம்பவங்களுடன் தொடர்புடைய 127 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். புங்குடுதீவு சிறுமி படுகொலையுடன் தொடர்புடைய மகாலிங்கம் சிவகுமார் நேற்று கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் அவருக்கு உதவினார் என சட்டக்கல்லூரியின் விரிவுரையாளர் ஒருவரையும் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருந்தது. இதனை தெரிந்துகொண்ட ஒருதொகுதி ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களை தாக்குவதற்கு தயாராக இருந்த தகவல் பொலிசாருக்கு கிடைக்கவே அவர்களை நீதிமன்றம் கொண்டுவருவதில் தாமதம் காட்டப்பட்டது.

கொலைவழக்கில் கொலையாளிகளை காப்பாற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தின் இயல்பு நிலையைக் குலைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தமையை முன்கூட்டியே தமக்கு சார்பாக பயன்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரான தேசவிரோத சக்திகள் உண்மைச் சம்பவங்களை திசைதிருப்பும் வகையில் ஈபிடிபி,சிறி ரெலோவினை சேர்ந்த செந்தூரன் குழு ,ஈ.பி.டி.பி இலிருந்து பிரிந்துசென்ற விஜயகாந் உட்பட புளொட்டினை சேர்ந்த மிகமுக்கிய நபர்களும் பின்னணியில் இருப்பதாக முன்னதாகவே முகநூலில் செய்திகள் பரப்பப்பட்டிருந்தது. 

குறித்த இவ் சமூகவிரோத சக்திகள் தற்போது த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் போன்றவர்களுடன் நட்பினை பேணிவருவதுடன் தாமும் தமிழ்த் தேசிய சக்திகளாக இனங்காட்ட முயல்வதையும் அவதானிக்கமுடிகிறது. அண்மையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில்கூட கூட்டமைப்பினரோடு ஒன்றாகவே கலந்துகொண்டதையும் முதலமைச்சருடன்கூட சிலவேளை தாமும் சென்று கூட்டமைப்பாக இனங்காட்ட முயன்றதையும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒட்டுக்குழு நபர்கள் மதுபோதையில் இருந்த அடியாட்களை முன்னரே தயார்ப்படுத்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்களிடையே ஊடுருவவிட்டு திறந்திருந்த ஒரு சில கடைகள் பொது இடங்களில் வன்முறைமூலம் அவற்றை மூடியதோடு பொலீஸ் மற்றும் இராணுவத்தினருக்கெதிராகவும் நீதிமன்ற வளாகத்தின்மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.





கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரம்.


அந்தநிலையில் நீதிமன்றத்தின் பிரதான வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியதுடன் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் பொலிஸாரின் தடைகளையும் உடைத்துக் கொண்டு உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்தை கற்கள், கண்ணாடிப்போத்தல்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர். அத்துடன் அங்கு நிறுத்தித்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனம், சட்டத்தரணிகளின் வாகனம் மற்றும் பொலிஸாரின் வாகங்களையும் கற்கள் மற்றும் பொல்லுகள் கொண்டு தாக்கினர். இதன்போது கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கலைய வைத்தனர்.





இருப்பினும் அவர்களை அடக்கமுடியாத நிலையில் சுமார் 2 மணித்தியாலயங்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கல்வீச்சுக்கள் இடம்பெற்றன. இதன்போது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன . அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் யாழ். சிறைச்சாலைக்கும் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தி சேதப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கைதுகளும் இடம்பெற்றன. இதனையடுத்து சுமார் 3மணித்தியாலயங்கள் பதட்டமாக இருந்த நீதிமன்ற சூழல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வன்முறையுடன் தொடர்புடைய 127 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்கள் - 36, துவிச்சக்கர வண்டிகள் -27, முச்சக்கர வண்டி - 02 என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் குறித்த ஒட்டுக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என பொலிஸ் வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் குமுறல்


காணொளிகள் புகைப்படங்களை வைத்து பொலீசார் தொடர்ந்தும் சந்தேகநபர்களை கைதுசெய்து வருகின்றனர். மேலும் கைதுகள் இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் 3 பொலிஸாருக்கும் சட்டத்தரணி ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் கண்டன அறிக்கை

ஆர்ப்பாட்டத்தில் குறித்த சில இளைஞர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தனது கண்டனத்தையும் ஊடக அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களை வன்முறை ரீதியாகத் தூண்டி வங்கிகள் பொதுஸ்தாபனங்கள் கடைகள் போன்றவற்றை மூடுமாறு அச்சுறுத்தி வருவதாகவும் ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் துவாரகேஷ்வரன் தெரிவித்தார்.

யார் யாருக்கு தொடர்பு?

இதுதொடர்பில் மேலும் புலத்திலிருந்து எமக்கு கிடைத்த தகவலின்படி சுவிசிலிருந்து இயங்கும் ஒரு முன்னைநாள் போராளிக்குழு நபருக்கும் இந்த சூத்திரதாரியான மகாலிங்கம் சிவகுமார் என்பவருக்குமிடையில் நெருங்கிய தொடர்பிருப்பதானவும் செய்திகள் பரவியிருந்தன. அதில் பெருந்தொகையான பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

அத்தோடு இதில் குற்றவாளிகள் சார்பில் ஆயராக இருந்த வி.ரி.தமிழ்மாறன் எதற்காக குற்றவாழிகளுக்கு சார்பாக ஆயராக இருந்தார் என்பதும் கொல்லப்பட்ட வித்தியா சார்பில் ஆயராக இருந்த சட்டத்தரணியான தவராசா என்பவர்கூட குறித்த போராளிக்குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும் முகநூல்வாயிலாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. இதற்கான விளக்கங்களை விரைவில் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.



பாதிக்கப்படப்போவது யார்?

இவ்வாறான ஜனநாயக ஆர்ப்பாட்டங்கள் இவர்களால் வன்முறையாக்கப்படுவதனூடாக குற்றவாளிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக சிங்களப்பேரினவாதத்தால் சித்தரிக்கப்பட்டு கொலையாளிகளை தென்னிலங்கைக்கு கொண்டுசெல்லும் திட்டத்தை அரங்கேற்றுவதன்மூலம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான வாய்ப்பினை நாமே ஏற்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது. அத்தோடு மீண்டும் யாழில் சாதகமான சூழல் ஏற்படவில்லை என்பதைக்காட்டி தொடர்ந்தும் சிங்கள இராணுவத்தினரை நிலைகொள்ள வைப்பதற்கும் ஏதுவாகிவிடக்கூடாது.

நாளைகூட இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு பேரணிகளில் ஏற்பாட்டாளர்கள் இத்தகைய செயல்களில் மிகவும் அவதானமாக இருப்பதோடு ஆர்ப்பாட்ட ஒழுங்குமுறைகளை சரியாக திட்டமிட்டு ஒழுங்கமைக்குமாறும் சிங்களப் பேரினவாதிகளோ அவர்களது அடிவருடிகளோ உள்நுழைந்து குழப்பம் விளைவிக்காத வகையில் அவதானமாக செயற்பட வேண்டுமென்பதே நியாயம்கோரிநிற்கும் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

முதலமைச்சரின் கண்டன அறிக்கை

இரண்டாம் இணைப்பு 

1.தமிழ்மாறன் மறுப்பு

புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்துக்குள், தேவையின்றித் தன்னை இழுத்து தனது பெயரைக் கெடுக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “புங்குடுதீவு எனது சொந்த இடம். வித்தியா கொலையை அடுத்து நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக நான் அங்கு சென்றிருந்தேன்.

கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களில் ஒருவரான, சுவிற்சர்லாந்தில் வந்த எம்.குமார் என்பவரின் தவறான செயற்பாடுகள் குறித்து நான் அறிவேன். குறித்த சந்தேகநபர் புங்குடுதீவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் இங்கு வந்தபோதெல்லாம், அந்தப் பகுதி மக்களிடையே பெரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளார்.

உண்மையில், சந்தேகநபரைக் கைது செய்வதற்கு நான் தான் காவல்துறையினரின் உதவியைக் கோரியிருந்தேன்.எவ்வாறாயினும், அவர் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிச் சென்று விட்டார். செவ்வாய்க்கிழமை நான் புங்குடுதீவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது, மதுபோதையில் இருந்த சிலர், என்னை எதிராக கீழ்த்தரமான வார்த்தைகளால் ஏசினர்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளதாக வெளியான ஊகங்களை அடுத்து, எனது பெயரைக் கெடுப்பதற்காக, சில அரசியல் சக்திகள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்துள்ளன. இது என்னை மிகவும் பாதித்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2.சுவிஸ் ரஞ்சன் மறுப்பு

இது தொடர்பாக சுவிஸ் ரஞ்சன் என்ற நபரிடமிருந்து மறுப்பு வெளியிட்டு எமது இணைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் தான் இல்லை என்றும் தான் சுவிஸில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பு:- இதில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ் சந்தேக நபர் இந்த சுவிஸ் ரஞ்சன் என்று எம்மால் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கப்படவில்லை என்பதையும். இவர் குறித்து வெளியான முகநூல் செய்தியினையே ஆதாரத்துடன் வெளியிட்டோம் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.