Breaking News

யாழிலும் இன்புளுவன்சா தொற்று அதிகரிப்பு

யாழ்.குடாநாட்டில் இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் தொற்றுக்கு இதுவரை 100ற்கு மேற்பட்டவர்கள் உள்ளாகியுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த வைரஸ் தொற்று இருந்த போதும் கடந்த சில வாரங்களாகவே குறித்த வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் உயிரிழந்துள்ளார். 

எனினும் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இன்புளுவன்சா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் வீடு திரும்பியுள்ளனர். 

வடக்கு மாகாணத்தில் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இந்த தொற்று இருப்பது குறித்தும் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.