மஹிந்தவின் மீள் எழுச்சியை குழிதோண்டி புதைப்பதே எமது நோக்கம் - பிரதமர் ரணில் தெரிவிப்பு
அதேபோன்று மஹிந்த ராஜபக் ஷவின் மீள் எழுச்சியையும் ஊழல் மிக்க சிந்தனைகளையும் குழிதோண்டிப் புதைத்து, நாட்டில் மீண்டும் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் உருவாக்குவதே எமது ஒரே நோக்கம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக் ஷவின் நோக்கம் மீண்டும் ஊழல்மிக்க ஆட்சியொன்றை உருவாக்குவதேயாகும். ஆனால் எமதுஎதிர்பார்ப்போ ஜனநாயகமிக்க நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதேயாகும். எனவே, ஊழல் மிக்க ஆட்சியா? அல்லது நல்லாட்சியா? என்பதை மக்களே இந்த சந்தர்ப்பத்தில் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு நிதி நிவாரண வழங்கும் வைபவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் நாவலப்பிட்டியில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நல்லாட்சிக்கான புரட்சியை கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நாம் ஆரம்பித்தோம். அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கம். மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் வேலட்பாளராக போட்டியிடட்டும். அவரின் சிந்தனைகள் மற்றும் மீள் எழுச்சியை நாம் குழிதோண்டிப் புதைப்போம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவோம். இந்த நாட்டில் பல கட்சி ஆட்சிமுறையொன்று இருக்க வேண்டும் என்பதையும் நாம் விரும்புகின்றோம். எதிர்வரும் தேர்தலில் சில கட்சிகளை இணைத்துக் கொண்டு நாம் போட்டியிடுகின்றோம். அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் போட்டியிடுகின்றன.
ஊழல் இல்லாத நல்லாட்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகவுள்ளது. அதற்காகவே கடந்த ஜனவரி எட்டாம் திகதி நாம் கூட்டாக இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்தோம். அப்போது அமைக்கப்பட்ட கூட்டணியின் உண்மையான நோக்கம் ஊழல் மிக்க மஹிந்த ஆட்சியை இல்லாதொழிப்பதேயாகும் என்பதை தெளிவாகக் கூறியிருந்தோம்.
இன்று எமது நாட்டிற்குத் தேவை நல்லாட்சியுடன் கூடிய சமூக, பொருளாதாரமிக்க சூழல் ஒன்றே. இதனையே மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள். இதனை இல்லாதொழிப்பதற்கே மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அணியினரும் முயற்சிக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையை கொண்டு 19 ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய விடயங்கள் பலவற்றை மஹிந்த ராஜபக் ஷ இல்லாதொழித்தார். ஆனால் நாம் அவ்வாறில்லாமல் நாட்டினதும் நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டே செயற்பட்டு வருகின்றோம்.
தேர்தலின் பின்னர் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு ஆட்சியமைப்பதே எமது நோக்கம். அவ்வாறு இணைந்து கொள்ளாத கட்சிகளையும் நாட்டின் அபிவிருத்தியில் பங்காளர்களாக சேர்த்துக்கொண்டு பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
நாட்டை அவபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் புதிய ஜனநாயக முறையொன்றும் நிரந்தரமான செயற்றிட்டமும் தேவை. இதனை அடிப்படையாகக் கொண்டே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். நாட்டின் அபிவிருத்திப் பணியை அடிப்படையாகக் கொண்டே நாம் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.
இதனை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தாருங்கள். அதன் பின்னர் நாம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களையும் நாட்டின் அபிவிருத்தியையும் சிறப்பாக முன்னெடுப்போம். அதற்காக சகல மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.