வர்த்தமானி அறிவித்தலை உடன் வாபஸ் பெற வேண்டும்! இல்லையேல் போராட்டம்
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன.
மேலும் ஜனநாயக விரோத மான இந்த திருத்தத்தை அரசாங் கம் வாபஸ்பெறாவிட்டால் நாடுதழுவிய ரீதியில் போராடுவதாகவும் தீர்மானித்துள்ளன.
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் விசேட கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி, ஈ.பி.டி.பி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நவசிஹல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை சோசலிச கட்சி, புதிய தொழிலாளர் முன்னணி, ஜனநாய தேசிய மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் மற்றும் பல கட்சிகள் கலந்து கொண்டிருந்தன.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே இந்த கட்சிகள் கொழும்பில் பல தடவைகள் கூடி தங்களது தீர்மானங்களை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலம் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஜனநாயக உரிமையை மீறுவதாகவே உள்ளது என தெரிவித்தே இந்த சந்திப்பு கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமைச்சர் ரவுர் ஹக்கீம் தெரிவிக்கையில்,
20 ஆவது திருத்தச் சட்டத்தை நாங்கள் எல்லோரும் ஏகமனதாக எதிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளோம் , அத்துடன் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் புரண ஒத்திசைவு இல்லாமல் வர்த்தமானியில் பிரசுரித்ததன் மூலம் எமது அடிப்படை ஜனநாயக உரிமையை பறித்திருப்பதை நாங்கள் கண்டிக்கின்றோம். அரசாங்கம் இதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இரட்டை வாக்குச் சீட்டு முறை உட்பட எமது பல விதமான திருத்தங்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. எந்த அடிப்படையும் இல்லாத ஒருதலைப்பட்சமாக ஒரு சில கட்சிகளை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரக்கூடிய தோ்தல் திருத்தமாகவே இதை நாங்கள் பார்க்கின்றோம்.
மேலும் இது தொடர்பாக எமது தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுடன் கலந்துரையாடியதன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நாட்டு மக்கள் முன் எடுத்துச் செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
20 ஆவது திருத்தம் தொடர்பாக சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் பல திருத்தங்களை முன்வைத்தன. என்றாலும் அரசாங்கம் எமது எந்தவொரு கருத்தையும் உள்வாங்காமல் தான்தோன்றித்தனமாக அவசரமாக இதனை வர்த்தமானியில் பிரசுரித்ததை நாங்கள் கண்டிக்கின்றோம். இது சகல சிறிய கட்சிகளையும் அழித்துவிட்டு் பெரிய இரண்டு கட்சிகள் மாத்திரம் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதாகும். எனவே அரசாங்கம் இதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இல்லாவிட்டால் தேசியரீதியில் சகல இன மக்களையும் ஒன்று சோ்த்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நாடுபுராகவும் கொண்டு செல்வோம்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுகுமார திஸாநாயக்க கூறுகையில்,
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலம் எமது நாட்டின் ஜனநாயகத்தையோ நாட்டு மக்ளின் உரிமைகளையோ மற்றும் ோ நாட்டு மக்களின் உரிமைகளையோ மற்றும் அரசியல் கட்சிகளின் உரிமைகளையோ பாதுகாப்பதற்கு போதுமானதாக இல்லை. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் எந்த வகையிலும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமாக அமையப்போவதில்லை. சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆழமாக ஆராய்ந்து இதனை திருத்தி அமைக்க வேண்டும். எனவே அரசாங்கம் இந்த சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி மற்றும் சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் இங்கு கருத்து தெரிவித்தனர்.








