"20 இற்கு பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும்''
இருபதாவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும். 20 ஆவது திருத்தத்தில் 237 ஆசன முறைமைக்கு ஐ.தே.க.வும் அமைச்சரவை யில் இணக்கத்தை தெரிவித்துள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன,
இருபதாவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இனி இது தொடர்பில் எதிர்ப்புக்கள் இருக்குமாயின் உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்புக்களை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யலாம். அதன் பின்னர் இருபதாவது திருத்தம் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
இருபதாவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும். 237 ஆசனங்களை கொண்ட இருபதாவது தேர்தல் முறைமை மாற்றத்திற்கான திருத்தத்திற்கு ஐ.தே.க. அமைச்சரவையில் தனது ஆதரவை வழங்கியது.
அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவும் இதற்கு கிடைத்துள்ளது. அத்தோடு சிறுபான்மை இன கட்சிகளும் சிறிய கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். எனவே 20 நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும்.
புலம்பெயர் தமிழர்கள்
கடந்த ஆட்சியில் கே.பி. ஊடாக மட்டுமல்ல நானும் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புக்களையும் சந்தித்தேன்.
பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு விருந்து வழங்கி பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். அவர்கள் வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தை இங்கு முதலீடு செய்ய விரும்புவதாகவும் ஓய்வு பெற்ற தாங்கள் இலங்கையின் வடக்கில் தமது சொந்த ஊர்களில் சொந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்து இலங்கையில் வாழ விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனை அன்றைய ஆட்சியாளர்களிடம் தெரிவித்தேன். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அமைதியாக வாழ விரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை வழங்குவதை எதிர்த்தனர்.
அவர்கள் முதலீடு செய்வதை எதிர்த்தார்கள். இலங்கைக்கு வருவதையே எதிர்த்தார்கள். இதனால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த நன்மைகள் கிடைக்காமல் போனது. அரசியல் தீர்வையும் நிம்மதியான வாழ்க்கையையுமே இவர்கள் எதிர்பார்த்தனர்.
பிரிவினையை இவர்கள் எதிர்த்தனர். ஆனால் அன்று சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இன்றைய அரசாங்கம் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது தவறில்லை.
பொதுத்தேர்தல்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் கடத்தல்காரர்கள் ஊழல் மோசடிக்காரர்களுக்கு போட்டியிடு வதற்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
விரைவில் போதைப்பொருள் விற்பனை கடத்தல்களை தடுப்பதற்காக விசேட பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.








