ரணிலை வீழ்த்த விரைவில் நாள் குறிப்போம் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் கூறுகிறார்
தேர்தல் திருத்தச்சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றினால் உடனடியாக பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து வீழ்த்த விரைவில் நாள் குறிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது எமது அதிர்ப்தியை வெளிப்படுத்தி வருகின்றோம்.
அதேபோல் நிதி அமைச்சில் நடைபெறும் கொள்ளைகளை வெளிப்படுத்த வேண்டிய தேவையும் எமக்கு உள்ளது. குறிப்பாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவருவது தொடர்பில் கடந்த சில வாரங்களாகவே நாம் தீர்மானம் எடுத்திருந்தோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவு அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை நிறைவேற்றுவதாகவே இருந்தது. ஆனால் ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இந்த பிரேரணை தொடர்பில் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் ரவிக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
ஆனால் மிகவும் போராட்டத்தின் மத்தியில் நாம் அமைச்சர் ரவி கருணாநாயகவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான அனுமதியை பெற்றுள்ளோம்.
அதற்கு அமைய எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி பாரளுமன்றத்தில் ரவி கருணாநாயவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும். இது விசேட தினத்தில் கூட்டப்படும் பாராளுமன்றம் என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே 6ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற விவாதம் பிற்பகல் 6.30 மணிவரையில் நடைபெறும். அதன்பின்னர் அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெறும்.
அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பிலும் நாம் சபாநாயகரிடம் தெரிவித்தோம். ஆனால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் உடனடியாக விவாதிக்க முடியாத நிலைமை உள்ளது.
குறிப்பாக அவர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் பல வழிமுறைகள் உள்ளன. நம்பிக்கை இல்லா பிரேணையை மூன்று மொழிகளுக்கும் மாற்றி சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் தேவைப்படும். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. அதேபோல் கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் நாம் அழுத்தமான கருத்துக்களை முன்வைத்ததுக்கு அமைய அடுத்த மாதம் மூன்றாம் வாரத்தில் இந்த விவாதத்துக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஆகவே அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுப்போம். வெகு விரைவில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுப்பதற்கான நாள் குறிப்போம்.
இந்த அரசாங்கம் மக்களின் ஆதரவில் அமையவில்லை. ஜனாதிபதியை மட்டுமே மக்கள் ஆதரித்துள்ளனர். ஆனால் பிரதமர் மக்களின் ஆதரவு இன்றி ஆட்சிக்கு வந்துள்ளார். எனவே இந்த அரசாங்கத்தின் ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்பதே எம் அனைவரினது எதிர்பார்ப்பாகும்.
எனினும் பாராளுமன்றத்தை கலைக்க முன்னர் 20அவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக உள்ளது. நாட்டில் ஆட்சி நடத்துவது எப்படி என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியவில்லை.
நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகின்றது. இவற்றை மீளவும் கட்டியெழுப்ப வேண்டும். மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் ஆட்சியை பலபடுத்தி இழந்த அனைத்தையும் மீளவும் நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.








