வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்த முடியாது!
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்த முடியாது. பாதுகாப்பு விடயத்தில் சில இரகசியங்களை பேணவேண்டியுள்ளது. எனவே அந்த விடயத்தை கூற முடியாது என்று இராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
வடக்கில் ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் விகிதம் இருப்பதாக வடக்கு முதலமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் யாழ். கட்டளைத் தளபதியிடமும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆனால் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்த முடியாது. பாதுகாப்பு விடயத்தில் சில இரகசியங்களை பேணவேண்டியுள்ளது. எனவே தேசிய பாதுகாப்பு விடயத்தை கருத்திற்கொண்டு எண்ணிக்கையை கூற முடியாது.
கேள்வி – காணி விடுவிப்பு எவ்வாறு உள்ளது?
பதில் - அது ஒரு செயற்பாடாகும். ஜனாதிபதியின் வழி காட்டலுக்கு அமைய முதற்கட்டமாக 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றை மக்களுக்கு வழங்கிவருகின்றோம். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாதவாறு காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி – வடக்கில் பெண்களின் பாதுகாப்பில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே? "
பதில் – (அமைச்சர் ராஜித்த) நான் வடக்குக்கு அடிக்கடி சென்று வருபவன். வடக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் 25 தடவைகள் சென்றிருப்பேன். யுத்த காலத்திலும் நான் அங்கு சென்றுள்ளேன். அவ்வாறு நான் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோதும் வடக்கு மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொண்ட சந்தர்ப்பங்களிலும் வடக்கில் பெண்களின் பாதுகாப்பில் சிக்கல் நிலவுவதாக யாரும் கூறவில்லை. அவ்வாறான பிரதிபலிப்பு அங்கு காணப்படவுமில்லை. தெற்கில் உள்ளவன் என்ற வகையில் என்னைவிட வடக்கை பற்றி தெரிந்த யாரும் தெற்கில் இருக்க முடியாது.
கேள்வி – அண்மையில் கொக்காவில் இராணுவ முகாமுக்கு அருகே புதிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றதே?
பதில் – (இராணுவ பேச்சாளர்) அவற்றை நாங்கள் நிராகரிக்கின்றோம். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவை பழைய ஆயுதங்களாகும். அதாவது தோட்டா போன்றவையே கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு இடத்தில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இவ்வாறான உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடவேண்டாம் என்று கோருகின்றோம்.