புலிகள் காலத்தில் பூனையைப் போலிருந்த பொதுபல சேனாக்கள் இன்று சிங்கத்தைப் போலாக முயற்சி
புலிகள் இயக்கம் நாட்டில் இருந்த காலத் தில் பூனையைப் போல இருந்த பொது பல சேனாக்கள் இன்று சிங்கத்தைப்போலாக முயற்சிக்கின்றார்கள்.
அவர்களுக்கு 17ஆம் திகதி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் அப்போது இவர்கள் மண்ணெண்ணெய் பட்டசாரைப் பாம்பைப் போல் ஓடி மறைவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜயலத் ஜயவர்தனவின் புதல்வரும் கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி யின் வேட்பாளருமான கவிந்து ஜயவர்தன தெரிவித்தார். மாகாண சபையினூடாக மட்டுப்படுத்தப்பட்ட
சேவையினையே மக்களுக்கு வழங்கமுடிகிறது. எனவே மக்களுக்கு நிறைவானதும் சிறந்ததுமான சேவையினை வழங்குவதற்கு 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது தந்தையாரான டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஒரு மனித உரிமைகள் செயற்பாட்டாளராக செயற்பட்டு அரசியலை முன்னெடுத்தார். இலங்கையர் என்றவகையில் தமிழ், சிங்களம்,முஸ்லிம் பேகர், மலே என சகல மக்களையும் ஒரேமாதிரியே நோக்கினார். அதுமாத்திரமன்றி
பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார்.
பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்த வடமாகாணத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தார். ஆகையினால் அவர்மீது புலி முத்திரை குத்தினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவனாக இருந்த நான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது. சமூகத்துக்கு முகம்கொடுக்க முடியாது மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டடேன்.
ஜயலத் ஜயவர்தனவுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் அதனால் தான் வடக்குத்தமிழ் மக்களுக்காக ஜயலத் பேசுகின்றார் என்றும் சேறுபூசத் தொடங்கினார்கள். அப்போது எனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் முடிவெடுத்தேன் எமது நாட்டிலுள்ள அப்பாவி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலைமைத்துவத்தை ஏற்று என்றாவதொரு நாள் அரசியலுக்கு வரவேண்டுமென்று எண்ணினேன்.
அதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு எனது தந்தையான டாக்டர் ஜயலத் ஜயவர்தன உயிரிழந்தார். எனவே அவருடைய பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டுமென்ற நோக்கிலும் இந்த நாட்டை நேசிக்கும் இளைஞன் என்றவகையிலும் நேரடியாக அரசியலில் இறங்க தீர்மானித்தேன். அதனடிப்படையில் கடந்த வருடம் மேல்மாகாணசபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 41000 வாக்குகளை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாவது இடத்தையெடுத்து வெற்றியீட்டினேன்.
இன்று சகல இன,மத மற்றும் மொழிகளை சார்ந்த மக்களையும் பிரதிநிதித்துவப்படத்தும் வகையிலேயே தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனது தந்தையை நேசித்ததை போன்று எந்த வேறுபாடுமின்றி மக்கள் என்னை நேசித்து அதிக விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்கு அனுப்புவார்கள்.
பாராளுமன்றத்துக்கு செல்லும் நான் எனது தந்தையின் வழியின் இன,மத பேதமின்றி மனித நேயத்துடன் மக்களுக்கான சேவையினை முன்னெடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.








