Breaking News

யாழ்,வன்னித் தேர்தல் தொகுதிகளில் இன்று ரணில் பரப்புரை!

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை அங்கு பயணம் மேற்கொள்கின்றார்.

இவர் வடக்கில் இன்று முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடம்பெறும் ஐக்கிய தேசிய முன்னணியின் (ஐக்கிய தேசியக் கட்சியின்) தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பரப்புரைக் கூட்டம் காலை 10 மணிக்கும், மன்னார் மாவட்டத்தின் பரப்புரைக் கூட்டம் நண்பகல் 12 மணிக்கும், வவுனியா மாவட்டத்தின் பரப்புரைக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பரப்புரைக் கூட்டம் மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பரப்புரைக் கூட்டம், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று வடக்கில் இடம்பெறும் ஐக்கிய தேசிய முன்னணியின் (ஐக்கிய தேசியக் கட்சியின்) தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பிரதமர் ரணிலுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பல தரப்பினரும் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.