தமிழ்க் கைதிகள் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உட்படுகின்றனர்
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு மாற்றங்கள் செய்துள்ள போதிலும் படையினர் தொடர்ந்தும் தமிழ்க் கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்தி வருகின்றனர் என்று பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சித்திரவதைகளிலிருந்து விடுதலை என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற நான்கு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சித்திரவதைகளிலிருந்து விடுதலை என்ற அமைப்பின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்து நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பிய பல இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறானவர்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதிகளவான சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வாறெனினும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் இந்த நிலைமை நீடித்து வருகின்றது. இந்நிலையில் நீண்ட காலமாக இலங்கையில் நிலவி வரும் சித்திரவதைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த புதிய தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மின்சார அதிர்ச்சி, பாலியல் வன்கொடுமை, தாக்குதல், சூடு வைத்தல், ஏனைய வழிகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சித்திரவதைகள் தொடர்பிலான அறிக்கை பிரித்தானியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திடம் சமர்ப்பிக்க ப்பட்டுள்ளது. எனினும் இந்த அறிக்கை குறித்து உயர்ஸ்தானிகராலயம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.








