படித்த, பண்புள்ளவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் - சோபித தேரர் வேண்டுகோள்
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்காக 225 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் இன்றைய தீர்க்கமான நாளில் படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் பாராளுமன்றம் அனுப்ப வாக்களிக்க வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய பாராளுமன்றத்தில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை வழங்க வேண்டும். இது சம்பிரதாய பூர்வமான தேர்தலாக இல்லாமல் சிந்தனை மாற்றத்திற்கான தேர்தலாக அமைய வேண்டுமென்றும் மாதுலுவாவே சோபித தேரர் குறிப்பிட்டார்.
மாதுலுவாவே சோபித தேரர் நேற்று ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தேர்தல்கள் திணைக்களத்தின் வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தேரர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு உட்பட நிதி நிர்வாகம் என அனைத்து உயரிய விடயங்களையும் உருவாக்கும் இடம் பாராளுமன்றமாகும். பாராளுமன்றம் நாட்டின் இறையாண்மை கொண்ட உயரிய இடமாகும். நாட்டின் இரண்டு கோடி மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 225 உறுப்பினர்களை தெரிவு செய்யும் தீர்க்கமான நாள் நாளையாகும். (இன்றாகும்).
எனவே இறையாண்மை கொண்ட பாராளுமன்றத்திற்கு எதனோல், போதை பொருள், கசினோ சூதாட்டக்காரர்கள், ஊழல் மோசடிக்காரர்கள், திருடர்களை அனுப்ப வேண்டாம்.படித்தவர்கள், பண்புள்ளவர்கள், புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்களுக்கு மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.
இத்தேர்தல் சம்பிரதாய பூர்வமான ஆட்சி மாற்றத் தேர்தலாக மட்டும் அமையாது சிந்தனை மாற்றம் தொடர்பான தேர்தாலாக அமைய வேண்டும். இன மத மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் கட்சி பேதங்களை மறந்து நாட்டையும் மக்களையும் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
முன்னைய தேர்தல்களைப் போலல்லாது இன்றைய தேர்தலில் சட்டம் பாதுகாக்கப்படுகின்றது.இதற்காக தேர்தல்கள் ஆணையாளருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டோம்.சுவரொட்டிகள் கட்அவுட்கள் ஊர்வலங்கள் உட்பட தேர்தல்கள் சட்டங்கள் மீறல் இம்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
நூற்றுக்கு நூறு வீதம் முழுமை பெறாவிட்டாலும் கடந்த கால தேர்தல்களை விட ஒழுக்கம் கடைபிடிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் தேர்தல்கள் வரலாற்றில் இத்தேர்தல் திருப்பு முனையாக அமைந்துள்ளது.இதேபோன்று தேர்தல் தினத்தன்றும் அதன் பின்னரும் தேர்தல் சட்டங்களை ஆணையாளர் கடுமையாக முன்னெடுக்க வேண்டுமென்று தெரிவித்தோம்.
சில இடங்களில் தேர்தல் மீறல் சம்பவங்கள் இடம்பெறுவதை சுட்டிக்கட்டியதோடு அரசியல் பேதம் பார்க்காது இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினோம்.ஜனாதிபதியின் கடிதத்தை மீள பிரசூரிக்க வேண்டாம். பிரசாரப்படுத்த வேண்டாமென தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார். தேர்தல் ஆணையாளர் தனது அதிகாரத்தை பயன்படுத்தும் நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளதை வரவேற்கின்றோம்.
இத் தேர்தல் வெறும் ஆட்சிமாற்றம் கட்சி மாற்றத் தேர்தலாக அமையாது சிந்தனை மாற்றுத் தேர்தல் அமைய வேண்டும்.புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.19 ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.








