சீனாவை இலங்கை புறக்கணிக்க முடியாது – சீன அரசு ஊடகம் கருத்து
இலங்கை சீனாவைப் புறக்கணிக்க முடியாது, ஏனென்றால், கொழும்புடனான அதன் உறவு ஒருதலைப்பட்ச அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று சீன அரசு நாளிதழான குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், சீன சார்புடைய மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டுள்ள நிலையிலேயே, சீனாவின் அதிகாரபூர்வ நாளிதழில் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவின் மூலோபாய முக்கியத்துவம் குறித்து விபரித்துள்ள, அந்த ஊடகம், மேற்குலக, இந்திய ஊடகங்கள், ராஜபக்சவை சீன சார்புடையவர் என்று முத்திரை குத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
“மைத்தி்ரிபால சிறிசேன அரசாங்கம் தனது வெளிவிவகாரக் கொள்கையை மீளாய்வு செய்தாலும், பெரும் அதிகார சக்திகளுடனான உறவுகளுடன் சமநிலை உறவுகளை கையாள முடிவு செய்திருப்பினும், சீனாவை புறம் தள்ளிவிட முடியாது. ஒரு சார்பு அரசியலினால், சீன- இலங்கை உறவுகள் தேக்கமடையும் என்று வெளிநபர்கள் மட்டும் சிந்திக்கின்றனர்.
ஆனால், சீனாவின் இருதரப்பு உறவுகளைப் பேணும் நடவடிக்கை எந்தவொரு கட்சி சார்ந்ததாகவும் இருக்காது. தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ராஜபக்ச அறிவித்ததில் இருந்து, மேற்குலக மற்றும் இந்திய ஊடகங்கள் அவரை பீஜிங்கின் விருப்புக்குரிய வேட்பாளராக அடையாளப்படுத்தின. அவரது தோல்வி பீஜிங் மீதான வெறுப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டன.
கடந்த ஜனவரி மாதம், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற போது, ஆட்சிமாற்றத்தினால் சீன- இலங்கை உறவுகளில் சவால்கள் ஏற்படும் என்றும், குறிப்பாக இலங்கையில் சீனாவின் முதலீடுகளில் தாக்கம் ஏற்படும் என்றும் ஊகங்கள் வெளியிடப்பட்டன.
ஒருசார்பு அரசியல் இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், மிகைப்படுத்தப்பட்டளவு செல்வாக்கைச் செலுத்தும் என்பது பொருத்தமற்றது. சீனாவுடன் உயர்மட்ட மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்காவின் இருகட்சி நாடாளுமன்றத்தின் ஆதரவு பெறப்பட்டுள்ளது.
எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வருகிறது என்பது முக்கியமல்ல, சீனாவுடனான நல்லுறவை இலங்கை பேணிக்கொள்ளும்” என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது குளோபல் ரைம்ஸ்.








