வடக்கில் பொலிஸ் நிலையங்கள் மூடப்படுமென விஜயகலா கூறியுள்ளமை ஆபத்தானது
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் வடக்கில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் மூடப்படும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருப்பது பிரிவினைக்கான பயங்கர எச்சரிக்கையாகும் என்று நாக விகாரை விஹாராதிபதி நவதகல பதும கீர்த்தி தேரர் தெரிவித்தார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி சிங்கள தேசம் கட்டியெழுப்பாவிட்டால் நாடு பறிபோகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தக் கட்சியை சேர்ந்தவரென்று தெரியாத நிலையுள்ளது என்றும் குறிப்பிடடார். கொழும்பு விஹாரமகாதேவி உள்ளக அரங்கில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றும்போதே நாக விஹாராதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தார். அவர் கலந்து கொண்ட கூட்ட மேடை பிரிக்கப்பட்டு இலங்கை ஈழ வரைபடம் வைக்கப்பட்டிருந்தது. அதற்குள்ளேயே பிரதமர் ரணில் உரையாற்றினார். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இந்த வடிவிலேயே ஈழ முத்திரையை வெளியிட்டிருந்தனர்.
இந்த மேடையில் விஜயகலா மகேஸ்வரனும் அமர்ந்திருந்தார். ஐ.தே.கட்சி ஆட்சி உருவான பின்னர் வடக்கில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் மூடப்பட்டு பொலிஸார் வடக்கிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது இக்கருத்து பிரிவினைக்கான பயங்கரமான கருத்தாகும். யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை மோசமாக மாறியுள்ளது.தெற்கிலிருந்து வரும் யாத்திரிகர்கள் தாக்கப்படுகிறார்கள். விஜயகலா மகேஸ்வரன் மிரட்டுகின்றார். இது தொடருமானால் வட மாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிவிடும்.
எனவே எதிர்வரும் 17ஆம் திகதி சிங்கள மக்கள் ஒன்றிணைந்து சிங்கள தேசியத்தை கட்டியெழுப்ப வாக்களித்து மஹிந்த ராஜபக் ஷவை இந் நாட்டின் பிரதமராக்க வேண்டும். இங்கு நான் இவ்வாறு பேசிவிட்டு யாழ்ப்பாணம் செல்ல முடியுமோ என்ற நிலையுள்ளது. ஆனால் நான் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தக் கட்சியை சேர்ந்தவரென்று தெரியாத நிலையுள்ளது என்றார். மெகம தம்மானந்த தேரர் நிகழ்வில் மெகம தம்மானந்த தேரர் உரையாற்றுகையில் இன்று கிழக்கில் இஸ்லாமிய அடிப்படை வாதம் வடக்கில் ஈழத்திற்கான சமஷ்டி கோரிக்கை என நாடு பிரிவனைக்கான திசைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து நாடு மீட்கப்பட வேண்டுமானால் மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் போட்டியிடுகின்றனர் இது பௌத்த மதத்திற்கு ஆபத்தாகும் என்றார்.