Breaking News

பூநகரியில் முளைத்தது புதிய விகாரை (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன கடந்த மாதம் 29ஆம் நாள் திறந்து வைத்துள்ளார்.

66-1ஆவது பிரிகேட் தளபதி லெப்.கேணல் எக்கநாயக்கவின் உத்தரவின் பேரில், அந்தப்படைப்பிரிவில் உள்ள அதிகாரிகளின் நிதியுதவி மற்றும், படையினரின் மனித வள உதவியுடன் இந்த வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், சிறியளவிலான பௌத்த விகாரைகள், வழிபாட்டுத்தலங்களை இலங்கை இராணுவத்தினர்  அதிகளவில் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.