Breaking News

குறுகியகாலப் பிரதமர் பதவியைக் கோருகிறார் மகிந்த

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கௌரவமாக அரசியலை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு 


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ராஜபக்ச குடும்பத்தினர் கோரியுள்ளதாக ‘சத்ஹண்ட’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்சவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக, ராஜபக்ச குடும்ப வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு ஆசன பெரும்பான்மையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவுக்கு குறுகியகால அடிப்படையில், பிரதமர் பதவியை வழங்குமாறும் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரப்பட்டுள்ளது.

சில மாதங்கள் கழித்து அவர் கௌரவமான முறையில் அரசியலில் இருந்து விலகிக் கொள்வார் என்றும், கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். அவர் விரைவிலேயே அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவார் என்றும், பிரதமராக இருக்கும் குகுறுகிய காலத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு எந்தவகையிலும் குறுக்கீடோ, தொந்தரவோ செய்யமாட்டார் என்றும் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச தரப்பினால், முன்வைக்கப்பட்ட மற்றொரு திட்டம் இலங்கை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி மகிந்த ராஜபக்சவுக்கு மூத்த அரசுத் தலைவர் என்ற பதவியை வழங்குவதற்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.

மூத்த அரசுத் தலைவர் என்பது, பாதுகாப்பு முன்னுரிமை, அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் அதிகாரங்கள், இராஜதந்திர விவகாரங்களில் ஒரு அரசுத் தலைவருக்குள்ள சலுகைகளைக் கொண்டதாக இருக்கும். இவ்வாறு மூத்த அரசுத் தலைவர் என்ற பதவியை உலகில் இரண்டு நாடுகளின் தலைவர்கள் வகித்துள்ளனர்.

ஒருவர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகதீர் முகமத், மற்றவர், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லி குவான் யூ. மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அறிவித்த பின்னரே, மூத்த அரசுத் தலைவராக நியமிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச அமைச்சராக நியமிக்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்தில் பின்வரிசையில் அமர வேண்டிய நிலை அவருக்கு ஏற்படும். இது அவரது கௌரவத்துக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும்“ என்றும் சிங்கள வாரஇதழ் தெரிவித்துள்ளது.