மஹிந்தவை கைது செய்ய முடியும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்ய முடியும் என முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் டபிள்யூ.ரீ.எம்.பீ.பி. வராவௌ தெரிவித்துள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆஜராகாமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுச் சட்டங்களின் அடிப்படையில் நிறுப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் எவரேனும் விசாரணைகளில் பங்கேற்பதனை நிராகரித்தால் அது அந்த ஆணைக்குழுவினை உதாசீனம் செய்வதாக கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.இதனை சட்டத்தை இழிவுபடுத்தும் செயலாகவும், ஆணைக்குழுவினை உதாசீனம் செய்யும் செயலாகவும் கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால் அல்லது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரிடம் சென்று விசாரணை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராக மறுக்கும் நபர் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவினைப் பெற்றுக் கொண்டு அவரைக் கைது செய்வதனையே ஆணைக்குழு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.