இலங்கை விவகாரத்தில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கவும்! 11 தமிழர் அமைப்புகள் கோரிக்கை
இலங்கை விவகாரத்தில் உள்நாட்டு அல்லது கலப்பு நீதித்துறைச் செயல்முறையை நிராகரித்து, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்போ, அல்லது ஒரு சர்வதேசப் பொறுப்புடைமைச் செயல்முறைக்கோ பரிந்துரைக்குமாறு 11 தமிழர் அமைப்புக்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
பிரித்தானிய தமிழ் கன்சர்வேடிவ்கள் (ஐக்கிய இராச்சியம்), பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்), இலங்கைத் தமிழ்ச் சங்கம் (அமெரிக்கா),
சர்வதேச ஈழத்தமிழர் பேரவை (கனடா- நோர்வே- பின்லாந்து- டென்மார்க்- ஸ்வீடன்- ஹாலந்து- பெல்ஜியம்- ஜெர்மனி- பிரான்சு- சுவிட்சர்லாந்து- அயர்லாந்து- இத்தாலி-அவுஸ்திரேலியா- நியூசிலாந்து-மற்றும் கூட்டாளி நாடான மொரிசியஸ்),
பசுமைத் தாயகம் அறக்கட்டளை, இந்தியா, இலங்கையில் சமத்துவத்துக்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (அமெரிக்கா), தென்பகுதி பண்பலை வானொலி (தென்னாபிரிக்கா), சுவீடன் தமிழர் மன்றம் (சுவீடன்), அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சகம்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தமிழர் அரசியல் நடவடிக்கைப் பேரவை(அமெரிக்கா), உலகத் தமிழர் அமைப்பு (அமெரிக்கா) ஆகிய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களே கூட்டாக இக் கோரிக்கையினை கடந்த ஆகஸ்ட் 18ஆம் நாளன்று 2015 ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளன.
கோரிக்கை மனுவின் முழுமையான வடிவம் வருமாறு;
இலங்கைத்தீவின் இறுதி யுத்தத்தில், பலியான தமிழர்களுக்கும் தப்பிப் பிழைத்திருப்பவர்களுக்கும் ஏற்பட்ட விவரிக்க இயலாத பேரழிவைக் கொண்டு வந்த நிகழ்வுகள் தொடர்பில் ஒரு திட்டவட்டமான அறிக்கை அளிக்கும் தங்கள் பணிக்காக, உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய நாங்களும், உலகெங்கும் உள்ள தமிழர்களும், உங்களுக்கும் உங்கள் அலுவலகத்திற்கும் எங்களுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எங்களுடைய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்த ஒரு பாரபட்சமற்ற சட்டபூர்வ ஆவணமாக அறிக்கையை வெளியிடுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.ஒரு உள்நாட்டுப் பொறிமுறையோ அல்லது சர்வதேச உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கலப்புப் பொறிமுறையோ இலங்கைத்தீவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்கக் கூடியதாக இருக்காது என்பதைப் பொறுப்புடன் உங்களுக்குத் தெரிவிக்கும் இந்த மனுவை நாங்கள் உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு நிறுத்துவதன் மூலம் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.ஐ.நா.வின் பொதுச் செயலருடைய நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையில் பொறுப்புடைமை குறித்து (மார்ச் 31, 2011) பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது:தனது குடிமக்களின் உரிமைகளை மீறுவதில், அது மீறப்பட்ட போது, அரசு தனது பாத்திரத்தையும் பொறுப்பையும் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்வது பொறுப்புடைமைக்கு அவசியமாகிறது.
அரசே சர்வதேசக் குற்றங்களில் சேர்க்கப்படும் போது, அந்தக் குற்றங்கள் சார்ந்த நீதியை வழங்குவதில் அது எந்தப் பாத்திரத்தையும் வகிக்க முடியாது.குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் தனது வழக்கில் தானே நீதிபதியாக இருக்கமுடியாது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டக்கோட்பாடு ஆகும்.இலங்கையில் மோதலுக்கு அடிப்படையான தன்மை, இரண்டு தேசங்களுக்கு இடையிலான, அதாவது சிங்கள தேசம் மற்றும் தமிழர் தேசம் ஆகிய இரண்டு தேசங்களுக்கு இடையிலான, ஒரு மோதலாகும். அப்படி இருக்கும்போது ஓர் அரசு அதன் தீர்மானத்தில் நடுநிலையான பாத்திரத்தை வகிக்கவேண்டும்.
இருப்பினும், 'சுதந்திரம்' பெற்றதிலிருந்து இலங்கைத்தீவின் வரலாறு எடுத்துக்காட்டியுள்ளபடி, இலங்கை அரசு, அதன் நீதித்துறை உட்பட, சிங்கள தேசத்தின் மேலாதிக்கத்தில் உள்ளது.அது தோற்ற அளவில்கூட, நடுநிலைத் தன்மையின் உயர்த்திப்பிடிக்கத் தவறிவிட்டது.
தமிழர்கள் இழிவுபடுத்தப்படும் நிலை வரும்போது, நீதித்துறை எப்போதும் அரசியல் தலைமைக்குக் கீழ்ப்படிந்தே நடந்துகொள்கிறது, மேலும் கடந்தகாலத்தின் இலங்கையின் விசாரணை ஆணையகங்கள் அனைத்தும் அதற்குச் சான்றாக உள்ளன.இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் விசாரணை அமைப்பின் ஆணை போர்க்குற்றங்களுடன் நின்றுவிடுவதில்லை, அது சர்வதேசக் குற்றங்களையும் உள்ளடக்கியதாகும்.
அது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் பிரிவு ஏ இல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் இனப்படுகொலை, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், ஆக்கிரமிப்புக் குற்றங்கள் ஆகியவையும் அடங்கும்.இனப்படுகொலை என்பது 'ஒரு தேசம், இனக்குழு, இனம் அல்லது மதக் குழு இன்னபிறவற்றை முழுமையாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதாவது ஒன்று' என்று பொருள்படும் என்று 1948 இனப்படுகொலை உடன்பாட்டின் பிரிவு வரையறுக்கிறது.
இனப்படுகொலை குறித்த இந்த வரையறையின்படியே, சிங்கள இனக்குழுவால் ஏறத்தாழத் தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்தப்படும் இலங்கை அரசு, ஒரு கலப்புப் பொறிமுறையின் பகுதியாகவோ, உள்நாட்டு அமைப்பின் பகுதியாகவோ, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் நீதி வழங்கக்கூடியதாக இருக்காது.ஆகவே, மேற்கண்ட வரையறைக்குள் அடங்கும் குற்றங்களை விசாரித்து ஒரு நியாயமான நீதி வழங்குவதற்கு, ஒரு வெளிப்புற, சுதந்திரமான சர்வதேச அமைப்பு இன்றியமையாததாக இருக்கிறது.
இலங்கையில், அரசாங்கத்தை மாற்றுவது என்பது நிறுவனமயமாக்கப்பட்ட அதன் தற்காப்பில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சில தரப்பினர் நம்பிவருகின்றனர்.இலங்கை 1948 ஆண்டில் ஒரு சுதந்திர அரசாக ஆனதிலிருந்து, தமிழர்கள் எண்ணற்ற ஆட்சி மாற்றங்களைப் பார்த்துவிட்டனர், மேலும் அந்த ஆட்சிகளில் ஒன்றுகூட தமிழர்களின் துயரத்தைத் தீர்ப்பதற்கு எந்த உண்மையான முயற்சிகளையும் எடுக்கவில்லை.
இலங்கையின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் மோசமான பெயர்பெற்ற 57 ஆவது படைப்பிரிவின் முன்னாள் படைத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜகத் தியாஸ் படைத்தலைமை அலுவலகத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்கள் இருவருமே சர்வதேச அரசுசாரா நிறுவனங்களால், மோசமான சர்வதேசக் குற்றங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைவதாக மட்டுமின்றி, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணைய விசாரணை அமைப்புக்கும் இலங்கை அரசிடம் கோரப்பட்ட பொறுப்புடைமையின் வெளிப்படையான போலித்தனமாகவும் இருக்கிறது.








