Breaking News

நாட்டைப்பிரிக்கும் வகையில் கூட்டமைப்பு ஜெனிவாவில் கருத்து

நாட்­டுக்கு எதி­ரான சர்­வ­தேச அழுத்­தங்­களை தடுக்க ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் செயற்­படும் போது நாட்டை பிரிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜெனி­வாவில் கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றது. ஒரு கூட்­ட­ணிக்குள் எவ்­வாறு இரண்டு செயற்­பா­டுகள் இடம்பெறமுடியும் என்று தூய்மையான ஹெல உறு­மய கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில கேள்­வி­யெ­ழுப்­பினார்.

சர்­வ­தே­சத்தின் தேவைக்­காக அர­சாங்­கமும் புலம்­பெயர் தமிழர்களின் தேவைக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் செயற்­ப­டு­வ­தாக அவர் குற்றம் சுமத்­தினார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்­பான செயற்­பா­டு­களை அர­சாங்கம் கையாளும் முறைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூறப்­படும் போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்­ததில் இருந்து தொடர்ச்­சி­யாக சர்­வ­தே­சத்­தினால் இந்த குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனினும் எமது அர­சாங்கம் இந்த விட­யத்தில் மோச­மாக செயற்­பட்­ட­தா­கவும் இந்த கலப்பு அர­சாங்கம் சர்­வ­தேச சவால்­களை சரி­யாக கையாள்­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். ஆனால் இந்த கூற்றை ஒரு­போதும் எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச சதித்­திட்டம் ஒன்று மேற்­கொள்­ளப்­பட்ட போது எமது அர­சாங்கம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சர்­வ­தேச சதித்­திட்­டத்தை இந்­நாட்­டுக்குள் அரங்­கேற்ற இட­ம­ளிக்­க­வில்லை.

நாட்டின் தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்தும் வகையில் நாம் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்தோம். இலங்­கையில் முடி­வுக்கு கொண்­டு­வந்த ஆயுத கலா­சா­ரத்தை மீண்டும் தலை­தூக்­க­வி­டாது தடுத்து தொடர்ந்தும் நாட்டை பாது­காப்­பாக வைத்­தி­ருந்தோம். ஆனால் இன்று நாட்டின் நிலைமை மீண்டும் மாறி­யுள்­ளது. நாட்டில் ஆயுத கலா­சாரம் இல்­லா­விட்­டாலும் அர­சியல் ரீதியில் மீண்டும் பிரி­வி­னைக்­கான சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. இன்று ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நாட்­டுக்கு எதி­ரான சர்­வ­தேச அழுத்­தங்­களை தடுக்க ஜெனி­வாவில் செயற்­படும் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாட்டில் சர்­வ­தேச விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் ஜெனி­வாவில் கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஒன்­றாக செயற்­பட்­ட­வர்கள் மீண்டும் நாட்டை பிள­வு­ப­டுத்தும் வேலை­யினை ஆரம்­பித்­துள்­ளனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எப்­போ­துமே நாட்­டுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை மட்­டுமே மேற்­கொள்ளும் என்­பது மீண்டும் நிரு­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இந்த அர­சாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகிய இரண்டு தரப்­புமே திட்­ட­மிட்டு காய் நகர்த்­து­கின்­றனர் என்­பதே உண்­மை­யாகும். 

அமெ­ரிக்க மற்றும் ஐரோப்­பிய நாடு­களின் தேவையை பூர்த்திசெய்யும் நோக்கத்தில் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. மறுபுறம் புலம்பெயர் புலிகளின் தேவையை பூர்த்திசெய்யும் வகையிலும் நாட்டில் ஒரு பிளவினை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டார்.