வடக்கு, கிழக்கு பிரச்சினை தீர்வுக்கு தேசிய அரசாங்கம் அடித்தளமாகும் - கிரியெல்ல நம்பிக்கை
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கம் அடித்தளமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்த முன்னாள் அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல.
மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.வுக்கு வழங்கிய உறுதிமொழியையே இன்றைய புதிய அரசு நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்திலுள்ள சபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று புதன் கிழமை கடைமைகளை பொறுப்பேற்கும் நிகழ்விலையே இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை காலை 9.44 மணிக்கு சபை முதல்வர் அலுவலகத்தில் ஆவணமொன்றில் கையெழுத்திட்டு பொறுப்புக்களை லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதற்கு முன்னராக பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் சபை முதல்வரின் உறவினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலக, வேலுகுமார் எம்.பி. உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இலங்கையின் பாராளுமன்றத்தில் இன்று புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கான பரீட்சார்த்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது தான் ஐ.தே.கட்சியும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கமாகும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மைத்திரி, ரணில், சந்திரிகா மூவரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதன் பிரகாரமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் இடம் பெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை பரீட்சார்த்தமாக ஏற்படுத்தியுள்ளோம்.இந்த இரண்டு வருட இணக்கப்பாட்டில் நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முடியும்.வடக்கு – கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேசிய அரசாங்கம் அடித்தளமாக அமையும்.
அத்தோடு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவும் நாட்டுக்கு புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கவும் பாராளுமன்றத்தில் ஐ.தே. முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை.இதனை எம்மால் தனித்து ஏற்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமையவும்.
அதேவேளை நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்றால் பிரதான கட்சிகளான ஐ.தே.கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டும்.இவையனைத்தையும் கருத்தில் கொண்டே தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சிறப்பானதொரு அடித்தளமாகும். இதன் மூலம் இரண்டு வருடங்களுக்குள் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அது மட்டுமல்லாது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து அவற்றை வெற்றி கொள்ளவும் இரண்டு கட்சிகள் இணைந்த தேசிய அரசால் முடியும்.2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீன் மூன் இலங்கை வந்தார்.
இதன் போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக உள்ளக விசாரணை நடத்தப்படுமென உறுதிமொழி வழங்கினார்.அது தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் கூட்டறிக்கை வெளியிட்டதோடு எழுத்து மூலம் உறுதிமொழியும் வழங்கப்பட்டது.
ஆனால் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால்ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ளது. அன்று மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய உறுதிமொழியையே இன்று புதிய அரசாங்கம் நிறைவேற்ற முன்வந்துள்ளதே தவிர வேறெதுவும் புதிதாக இடம்பெறவில்லை.
ஐ.நா. சபையின் உறுப்பு நாடு இலங்கை. அதன் பிரகடனங்களில் நாம் கையெழுத்திட்டுள்ளோம். எனவே அவற்றை நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் சர்வதேசத்துடன் முரண்பட்டுக் கொண்டிருந்தனர்.ஆனால் எமது ஆட்சியில் சர்வதேசத்துடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு சர்வதேச ஆதரவுடன் சவால்களை வெற்றி பெறுகின்றோம்.
சிவில் யுத்தங்கள் இடம்பெற்ற நாடுகளில் பிரச்சினைகள் தலைதூக்குவது இயற்கையாகும்.எமது நாட்டிலும் 1971இல் கிளர்ச்சி ஏற்பட்டது. பிரேமவதி மனம்பேரி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.சந்திரிகா ஆட்சிக்காலத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். எனவே உள்ளக நீதி விசாரணை என்பது புதியதல்ல.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்குச் சென்று இலங்கைக்கு உதவி வழங்க வேண்டாம் மனித உரிமைகள் மீறப்படுவதாக முறைப்பாடு செய்து எமக்கு வழிகாட்டியவர் மஹிந்த ராஜபக்ஷவாகும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.








