Breaking News

40,000 பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்பதை நிரூபிக்க விசாரணை தேவை

இலங்­கையில் நாற்­ப­தா­யிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்­பதை நிரூ­பித்­தா­க­வேண்டும். 

அதேபோல் எம்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களை பொய்­யென நிரூ­பிக்க கட்­டாயம் ஒரு விசா­ரணை பொறி­முறை அவ­சி­ய­மா­ன­தாகும். ஆனால் இந்த விசா­ர­ணையின் போது எமக்கு சாத­க­மான ஆலோ­ச­னைகள் அமை­யு­மானால் மாத்­தி­ரமே சர்­வ­தேச உத­வி­களை நாட­மு­டியும் என அமைச்சர் சம்­பிக ரண­வக்க தெரி­வித்தார்.

மஹிந்த ராஜபக் ஷவே கலப்பு நீதி­மன்ற கலா­சா­ரத்தை இலங்­கைக்குள் அனு­ம­தித்தார் எனவும் அவர் குற்றம் சுமத்­தினார்.கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை தொடர்­பான விவ­கா­ரமே இப்­போது அனை­வ­ரதும் கவ­னத்தையும் ஈர்த்­துள்­ளது. குறிப்­பாக இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இறுதி முடிவு இம்­மாத இறு­தியில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. ஆனால் இது இலங்கை தொடர்பில் வெளி­வரும் முதல் அறிக்கை அல்ல. இதற்கு முன்­னரும் முன்னாள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார். ஆகவே இதை நாம் பாரிய அச்­சு­றுத்­த­லான ஒரு விட­ய­மாக கருத வேண்­டிய அவ­சியம் இல்லை.

ஆனால் சர்­வதேச அழுத்­தங்கள் தொடர்ச்­சி­யாக ஏற்­ப­டவும் சில கார­ணிகள் உள்­ளன. அதா­வது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சர்­வ­தே­சத்­துக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களே இலங்கை மீது அழுத்­தங்கள் ஏற்­படக் கார­ண­மாகும். அதா­வது நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைத்தல் மற்றும் காணா­மல்­போ­னோரை கண்­ட­றியும் நட­வ­டிக்­கைகளை மேற்­கொள்­ளுதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

அதேபோல் கலப்பு நீதி­மன்ற முறைமை தொடர்பில் குறிப்­பி­டு­கின்­றனர். இலங்­கைக்கு கலப்பு நீதி­மன்ற முறை­மை­யா­னது புதிதல்ல. மஹிந்த ராஜபக் ஷவே முதலில் இந்த கலப்பு நீதி­மன்ற முறை­மையை இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­தினார். மஹிந்த ராஜபக் ஷவே இலங்­கையில் பிரித்­தா­னிய நீதி­ப­தி­களின் உத­வி­யுடன் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்டார்.

புலி­களில் இருந்து ஆரம்­பிக்க வேண்டும்

அதேபோல் எமது இரா­ணு­வத்தை சர்­வ­தேச மட்­டத்­திலும் உள்­ளக பொறி­மு­றை­க­ளிலும் விசா­ரிக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர். ஆனால் இரா­ணுவ குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் இரா­ணுவ வீரர்­களை விசா­ரித்து வாக்­கு­மூலம் பெறப்­பட்­டுள்­ளது. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இலங்கை இரா­ணு­வத்தை தண்­டிக்கும் வகையில் இரா­ணு­வத்தின் மீது இலங்­கையில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ள­ப்படவில்லை.

அதேபோல் இலங்கை இரா­ணு­வத்­தையோ அல்­லது குறிப்­பிட்ட நபர்­களையோ தண்­டிக்கும் உரிமை ஐக்­கிய நாடுகள் மனி­த­ உ­ரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு இல்லை. அதேபோல் இலங்­கையில் நடை­பெற்ற யுத்­தத்தின் போது யுத்தக் குற்­றங்கள் நடந்­தே­றி­யுள்­ளன என இரா­ணு­வத்தை விசா­ரிப்­ப­தைப்போல் விடு­தலைப் புலி­க­ளையும் விசா­ரிக்க வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் இன்று இல்­லையே, முழு­மை­யாக அழிக்­கப்­பட்ட பின்னர் எவ்­வாறு அவர்­களை விசா­ரிப்­பது என்ற கேள்­வியை சிலர் எழுப்­பலாம். ஆனால் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் ஆயு­தக்­கு­ழுவை அழித்­தி­ருந்­தாலும் அவர்­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்கள் உள்­ளனர். பிர­பா­கரன், பொட்டு அம்மான் கொல்­லப்­பட்­டாலும் அவர்­க­ளுக்கு நிதி உதவி, ஆயுத உத­வி­களை வழங்­கிய நபர்­களை விசா­ரித்து அவர்­க­ளையும் நீதி­மன்றில் நிறுத்­த­வேண்டும். அவர்­களும் இந்த சம்­ப­வங்­களுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும். இவர்கள் தொடர்பில் நேர­டி­யான அழுத்­தங்கள் இல்­லா­வி­டினும் மறை­மு­க­மாக இவர்கள் மீது அழுத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. எனவே புலி­களில் இருந்து விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க வேண்டும்.

இலங்­கையில் போர்க்­குற்­றங்கள் இடம்பெற்­றுள்­ளன என தெரி­விப்­ப­வர்கள் உண்­மையில் இந்தப் பிரச்­சினை எங்­கி­ருந்து ஆரம்­பித்­தது என்­ப­தையும் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும்.

இலங்­கையை அச்­சு­றுத்­த­லான நாடாக மாற்­றி­யது யார்? ஆயுத கலா­சா­ரத்தின் மூலம் நாட்டில் மூவின மக்­க­ளையும் கொன்­று­ கு­வித்­தது யார்? யுத்தக் குற்றம் யாரால் ஆரம்­ப­ிக்கப்பட்டது? மனித உரி­மைகள் மீறல்­களை மேற்­கொண்­டது யார்? இந்த கேள்­வி­க­ளுக்கு ஒரே பதி­லாக விடு­த­லைப்­பு­லி­க­ளையே குறிப்­பிட முடியும். எனினும் எமது இரா­ணு­வத்தினரே இந்த செயற்­பா­டு­களில் இருந்து நாட்­டையும் மக்­க­ளையும் காப்­பாற்­றினர். அதேபோல் இப்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் அறிக்­கையும் கூட ஒரு பக்கம் சார்ந்­த­தா­கவே அமைந்­துள்­ளது. இதில் மாற்றுக் கருத்­துக்கு இடம் இல்லை.

விசா­ரணை அவ­சி­ய­மா­னது

மேலும் இலங்கை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் கட்­டாயம் ஒரு விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். இலங்கை இரா­ணு­வத்தின் மீதும், எமது நாட்டின் மீதும் ஏற்­பட்­டி­ருக்கும் அவப்­பெ­யரை நிவர்த்தி செய்­ய­வேண்டும். இலங்­கையில் உண்­மை­யி­லேயே நாற்­ப­தா­யிரம் பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­னரா என்ற உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இந்த குற்­றச்­சாட்­டு­களை கண்­ட­றி­யவும் உண்­மை­களை உல­குக்கு வெளிப்­ப­டுத்­தவும் விசா­ரணை ஒன்று நடந்­தா­க­வேண்டும். எந்த உண்­மை­க­ளையும் மூடி மறைக்­கக்­கூ­டாது என்­பதில் எமது அர­சாங்கம் தெளி­வாக உள்­ளது.

ஆனால் இந்த விசா­ர­ணைகள் முழு­மை­யாக இலங்­கையின் தலை­யீட்டில் நடக்­க­வேண்டும். எந்­த­வொரு பக்­கச்­சார்­பான தலை­யீ­டு­க­ளையும் அனு­ம­திக்­காது சுயா­தீன உள்­ளகப் பொறி­மு­றை­களின் மூலம் கையா­ள­வேண்டும். அதேபோல் சர்­வ­தேச தலை­யீடு வேண்டாம் என்ற நிலைப்­பாடும் இல்லை. விசா­ர­ணைகள் நடை­பெ­ற­வேண்டும், இரா­ணுவம் பாது­காக்­கப்­பட வேண்டும், உள்­ளக பொறி­மு­றையை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­பட வேண்டும், விடு­தலைப் புலி­களை குற்­ற­வா­ளி­க­ளாக நிரூபிக்க வேண்டும், 

இந்த செயற்பாடுகளை பலப்படுத்த சர்வதேசம் உதவுமாயின் அதற்கு சர்வதேசத்தின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள நாம் தயார். அவ்வாறு இல்லாது புலிகளின் குரலாய் சர்வதேசம் செயற்படுமாயின் ஒருபோதும் எந்தவொரு சர்வதேச தலையீட்டுக்கும் அனுமதிக்க மாட்டோம். எமது அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதுவேயாகும். அதேபோல் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் என்ன தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கையில் என்ன செய்வது என்பதை இலங்கையின் பாராளுமன்றத்தின் மூலமே தீர்மானிக்க வேண்டும். ஆகவே என்ன செய்வது என்பது தொடர்பில் நாமே இறுதி தீர்மானம் எடுப்போம் என்றார்.