அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து இலங்கை கவனமெடுக்க வேண்டும்! பிரிட்டன் கோரிக்கை
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனமெடுக்க வேண்டுமென பிரிட்டன் ஜெனிவாவில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டனின் பிரதிநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:-
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் நாங்கள் எமது வரவேற்பை தெரிவிக்கின்றோம். அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கிய அர்ப்பணிப்புக்களை நிறைவேற்றுமாறு இலங்கையை ஊக்குவிக்கின்றோம்.
அதுமட்டுமன்றி, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனமெடுக்கவேண்டும். மேலும் நம்பகரமான ஆலோசனை மிக்க நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை உருவாக்கி அதனூடாக இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின் றோம் என்றார்.
ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் ஆரம்ப உரையை நிகழ்த்திய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை நாளை புதன்கிழமை வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்.








