Breaking News

பிள்ளையானிடம் இன்று விசாரணை


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து நாம் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோதும், தமக்கு மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையென குறிப்பிட்டனர்.

அநேகமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலை குறித்த விசாரணைக்கே பிள்ளையான் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை குறித்து, ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினர் பிள்ளையானிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, அண்மைய விசாரணைகளின் பிரகாரம் ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுமானது, முன்னாள் இராணுவ கேர்ணல் ஒருவரால் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதாகவும், பிள்ளையான் அதனை சரண் என்பவருக்கு கைமாற்றியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இவ்விரு விடயங்கள் குறித்தும் வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்யவே பிள்ளையான் அழைக்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.