Breaking News

மீனவர் பிரச்சினை - ஜெயலலிதா மீண்டும் மோடிக்கு கடிதம்

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த 34 தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் இராமேஸ்வரம் மாவட்ட மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை நேற்று முன்தினம் இரவு சிறைப்பிடித்து சென்றது. 

மேலும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு வலைகளும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது, என தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 34 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 

அவர் தமது கடிதத்தில் கூறியதாவது:- 

86 மீனவர்களை விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி அவர்கள் இன்னும் இலங்கையிலேயே இருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். 

தமிழக மீனவர்களை விடுவிக்க, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இலங்கை அரசை அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். அதேபோல் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமிழக மீனவர்களின் 46 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தங்களுடைய பாரம்பரியமான கடல் பகுதிகளில் அமைதியாக மீன்பிடித்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் அநீதியானது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜை நேற்று முன்தினம் சந்தித்து, தமிழக மீனவர்களின் பிரச்சினைகளில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த தனது கடிதத்தினை அளித்ததையும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.